மீண்டும் சிக்கலில் அதிமுக... 2 பதவிக்கு செம அடிதடியாம்.. முட்டி மோதும் எம்எல்ஏக்கள்!
இரண்டு அமைச்சர் பதவிகளுக்கு அதிமுகவில் கடும் போட்டி எழுந்துள்ளது
Recommended Video
சென்னை: நீயா, நானா, விவகாரம் கொஞ்ச நாள் இல்லாமல் வெளியே வராமல் இருந்தது.. வேலூர் தேர்தல் முடிந்ததும் இப்போது திரும்பவும் அடிபட ஆரம்பித்துள்ளது.. இதற்கு காரணம் காலியாக உள்ள 2 அமைச்சர் பதவிகள்தான்!
தமிழகத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட மணிகண்டன் மற்றும் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பாலகிருஷ்ணா ரெட்டி என இரண்டு அமைச்சர் பதவிகள் காலியாக உள்ள நிலையில் அவற்றைப் பிடிப்பதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் பலர் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி இப்போது ஜெயிலுக்கு போய்விட்டார். அதேபோல, கேபிள் டிவி நிறுவனம் தொடர்பான பிரச்சனையில் மணிகண்டன் பதவியும் பறிபோய்விட்டது.
இப்போதைக்கு பாலகிருஷ்ணா ரெட்டி பணியை அமைச்சர் செங்கோட்டையனும், மணிகண்டனின் பணியை ஆர்.பி.உதயகுமாரும் கூடுதலாக கவனித்து வருகிறார்கள். இப்போது காலியாக உள்ள இந்த 2 அமைச்சர் பதவிக்குதான் கட்சிக்குள் போட்டா போட்டியே!

அமைச்சர்கள்
ஜெயலலிதா இருக்கும்போது, யார் பதவி எப்போது பறி போகுமோ என்ற பீதி இருந்து கொண்டே இருக்கும். பொழுது விடிந்தால் பதவி இருக்குமோ, இருக்காதோ என்ற கலக்கம் இருந்ததால், அன்றைய அமைச்சர்களுக்கு நிம்மதியான தூக்கம் கூட இல்லாமல் இருந்தது.

மணிகண்டன்
ஆனால் இந்த ஆட்சியில் அப்படி இல்லை... எதிர்பாராதவிதமாகத்தான் பாலகிருஷ்ணா சிறைவாசம் அமைந்தது. அதுவும் இல்லாமல் இது கோர்ட் சம்பந்தப்பட்ட விஷயம். அதனால் பதவி பறிப்பு என்பது மணிகண்டன் விஷயத்தில்தான் நடந்தது. முதல்முறையாக இந்த ஆட்சியில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது.

நெருக்கடி
இப்போது இந்த அமைச்சர் பதவியை பெறுவற்கு எம்எல்ஏக்கள் சிலர் அதிமுக தலைமைக்கு நெருக்கடி தர ஆரம்பித்துள்ளனர். இதிலும் ஒரு தரப்பு ஓபிஎஸ்-ஐயும், இன்னொரு தரப்பு எடப்பாடியையும் அழுத்தம் தந்து தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்க செய்யும்படி நெருக்கி வருகிறதாம். ராஜ்ய சபா உறுப்பினர் தேர்விலும் இப்படித்தான் பேச்சு எழுந்தது. ஆனால் எடப்பாடியாரின் வியூகமே அதில் எடுபட்டதாக சொல்லப்பட்டது. அதற்கு வேலூர் தேர்தல்தான் என்ற ஒரு காரணமும் முன் வைக்கப்பட்டது.

எடப்பாடியார்
இப்போது, இரு தலைமையின் கீழ் மீண்டும் சில எம்எல்ஏக்கள் பதவி கேட்டு வருகிறார்கள். ஆனால், இந்த 2 வருட ஆட்சி எப்படி பாதிப்பு இல்லாமல் போனதோ, அப்படியே வரக்கூடிய 3 வருஷமும் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடக்க வேண்டு என்று எடப்பாடியார் விரும்புகிறார்.

விசுவாசம்
அதனால் தனக்கு விசுவாசமானவர்களுக்கே பொறுப்பு தருவார் என்கிறார்கள். ஒருவேளை அப்படி தரும் பட்சத்தில் நிச்சயம் ஓபிஎஸ்-ஐ சரிக்கட்டிவிட்டுதான் எடப்பாடியார் தனது முடிவை எடுப்பாரே தவிர, கட்சிக்குள் ஒரு சின்ன பிளவையும் இனி விழ விட மாட்டார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்! பார்ப்போம்.. அந்த அமைச்சர் பதவிக்கு யார்தான் வரப்போகிறார்கள் என்பதை!












Click it and Unblock the Notifications