என்டிஏ கூட்டணியில் புதிய நீதிக் கட்சி போட்டியிடும்.. 6 தொகுதிகளை கேட்போம்.. ஏசி சண்முகம் அறிவிப்பு!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக புதிய நீதிக் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் அறிவித்துள்ளார். 2026 சட்டசபைத் தேர்தலில் புதிய நீதிக் கட்சிக்காக 6 தொகுதிகளை பெற முயற்சிப்போம் என்றும் ஏசி சண்முகம் கூறியுள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு இன்னும் 2 மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. ஏற்கனவே அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்கள் விநியோகித்து வருகின்றன. பாஜக தரப்பில் வேட்பாளர் பட்டியலே தயார் நிலையில் இருக்கிறது.

திமுக கூட்டணியை பொறுத்தவரை அத்தனை கட்சிகளும் இணக்கமாக இருந்து வரும் சூழலில், அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே தற்போது வரை இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் பிரம்மாண்ட கூட்டணி அமைக்கப்படும் என்று தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அன்புமணி தலைமையிலான பாமக விரைவில் அதிமுக கூட்டணியில் இணையலாம் என்று கருதப்படுகிறது.
அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேபோல் தமாகா தலைவர் ஜிகே வாசன் என்டிஏ கூட்டணி என்பதை உறுதி செய்திருக்கிறார். இந்த நிலையில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏசி சண்முகம், இந்த தேர்தலில் என்டிஏ கூட்டணியில் தொடர்வதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து ஏசி சண்முகம் பேசுகையில், என்டிஏ கூட்டணியில் புதிய நீதிக் கட்சி அங்கம் வகிக்கும்.
வாஜ்பாய் காலத்தில் இருந்தே புதிய நீதிக் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. 2026 சட்டசபைத் தேர்தலிலும் என்டிஏ கூட்டணியில் இணைந்து போட்டியிடும். குறைந்தது 6 இடங்களையாவது பெற்று 6 எம்எல்ஏ-க்களை எங்கள் சார்பாக சட்டமன்றத்திற்கு அனுப்புவோம் என்று தெரிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் புதிய நீதிக் கட்சி போட்டியிட்டது. வேலூர் தொகுதியில் போட்டியிட்ட ஏசி சண்முகம் தோல்வி அடைந்தார். இம்முறை அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய நீதிக் கட்சி இணையும் சூழலில், வேலூர் மாவட்டத்தில் உள்ள சில தொகுதிகளில் மீண்டும் போட்டியிடலாம் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications