‛கேம் சேஞ்ச்’.. நாடாளுமன்ற தேர்தலுக்குள் சசிகலா வசம் செல்லும் அதிமுக? உடைத்து பேசிய முக்கிய புள்ளி
சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுக சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் என நீதிமன்ற வழக்குகளை சுட்டிக்காட்டி சசிகலாவின் ஆதரவாளரான தேனி கர்ணன் பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல அணிகளாக உடைந்தது. தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். தற்போதைய சூழலில் அதிமுகவில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 2 பேரும் தொடர்ந்த வழக்கு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே தான் தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுக அதனை முறித்துள்ளது. இதனால் மீண்டும் அதிமுக தொடர்பான விஷயம் பேசுப்பொருளாகி உள்ளது.
இத்தகைய சூழலில் தான் சசிகலாவின் ஆதரவாளரான தேனி கர்ணன், ‛ஒன் இந்தியா' தமிழுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சுட்டிக்காட்டிய அவர் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அதிமுக சசிகலா வசம் செல்லும் என கூறியுள்ளார். இதுதொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: அதிமுக-பாஜக கூட்டணி முறிந்துபோய் உள்ளது. பாஜகவுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி செயல்படமாட்டார் என முந்தைய காலங்கள் நீங்கள் கூறியுள்ளீர்கள். ஆனால் இன்று பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிச்சாமி துணிச்சலாக முறித்துள்ளாரே?
தேனி கர்ணன்: துணிச்சல் எல்லாம் கிடையாது. பாஜகவில் இருந்து விலகுகிறோம். நிரந்தரமாக விலகுகிறோம் என எடப்பாடி பழனிச்சாமி கையொப்பம் இல்லாத கடிதம் தான் வெளிவந்துள்ளது. ஊடகங்களில் ஜெயக்குமார், கேபி முனுசாமி தான் பேசியுள்ளனரே தவிர எடப்பாடி பழனிச்சாமி எதுவும் பேசவில்லை. ஜெயலலிதா கூறியது போல் மோடியா? இந்த லேடியா? என்ற பாணியில் எடப்பாடி பழனிச்சாமி, மோடியா? இந்த எடப்பாடியா? எனக்கூறினால் நாங்கள் நம்புவோம். ஆனால் இது நடக்கவில்லை. இது சும்மா உள்குத்து வேலை. ஆடு பகை, குட்டி உறவு என்பது போல் உள்ளனர். அறியாமல் பேசும் ஜெயக்குமார் வாயை அடக்கி உள்ளார். கேி முனுசாமி தான் தற்போது பேசுகிறார். அதேபோல் எஸ்பி வேலுமணி மற்றும் அவரது சகாக்கள் பேச வேண்டும். டெப்பாடி பனிச்சிமி பேச வேண்டும். எடப்ாடி பழனிச்சாமி தான் பேச வேண்டும்.

அதிமுக என் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. நான் தான் கட்சியின் பொதுச்செயலாளர். கட்சியின் அனைத்து முடிவுகளையும் நான் தான் எடுப்பேன். தமிழ்நாட்டில் கட்சியில் யாரை சேர்ப்பது, யாரை நீக்குவது என்பது பற்றிய முடிவை நான் தான் எடுப்பேன். இதற்கான அதிகாரம் எல்லாம் எனக்கு இருக்கு. அதனால் முதல் அமைச்சர் வேட்பாளரை கூட நான் தான் தேர்வு செய்வேன் என கூறினால் அதிமுகவை வழிநடத்தும் தகுதி வாய்ந்த தலைவராக ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் அவரிடம் அது இல்லை. மாறாக பாஜகவிடம் இருந்து விலகிவிட்டோம்.. விலகிவிட்டோம் என அவர் கூறுகிறார். இதனை யாரும் நம்பவில்லை.
கேள்வி: நீங்கள் ‛ஆடு பகை குட்டி உறவு' என கூறுகிறீர்கள். பகை யாரோடு, உறவு யாரோடு என சொல்கிறீர்கள்?
தேனி கர்ணன்: ஜெயக்குமார் பேசிய மறுநாள் எஸ்பி வேலுமணி உள்ளிட்டவர்கள் டெல்லி சென்றனர். டெல்லிக்கு மன்னிப்பு கேட்க சென்றனர். மன்னிப்பு கேட்க சென்றவர்களை கூட அவர்கள் (பாஜக) மன்னிக்கவில்லை. இதனால் பாஜக தான் அவர்ளுடன் விலகி உள்ளதாக கணிக்க முடியாது. ஏனென்றால் தொடர்ச்சியாக பாஜக தமிழ்நாட்டில் நாங்கள் தான் அடுத்த முதல் அமைச்சர். நாங்கள் தான் இப்போது எதிர்க்கட்சி என கூறி வருகின்றனர். அப்படி இருக்கும்போது எடப்பாடி பழனிச்சாமியை நம்பி தமிழ்நாட்டில் எதையும் செய்ய வேண்டாம். தனியாக போறதே நல்லது தான் என நினைக்கின்றனர். அதனால் தான் எச் ராஜா, அதிமுக சி்ன்னாப்பின்னமாகி உள்ளது.
இதனால் அதிமுகவை நம்பி பயணிப்பதை விட தனித்து கூட்டணி அமைப்பதாக செல்லலாம் என தெரிவித்துள்ளார். இதனால் கூட்டணி முறிவு என்பது ஒரு நாடகம். அதோடு பாஜக என்ன சொல்கிறது என்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் உங்களை மட்டும் நம்பி பயணிக்க முடியாது. உங்களின் பிளவை ஒன்று சேருங்கள் என கூறினார்கள். அதை எடப்பாடி பழனிச்சாமி ஏற்கவில்லை. இதனால் நாசுக்காக அண்ணாமலை வெளியே போங்கப்பா எனும் வகையில் பேசி வந்தார். குறிப்பாக ஜெயலலிதாவை விமர்சனம் செய்தார். ஆனால் விலகவில்லை. தற்போதும் வெளியே வந்தாலும் அதிமுகவினர் அமித்ஷா மோடியுடன் பேசி வருகின்றனர். கூட்டணி முறியவில்லை. ஆனாலும் சிலர் வெளியே பேசி வருகின்றனர். விரைவில் அவர்களுக்க வாய்ப்பூட்டு சட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி போட்டு விடுவார்.
கேள்வி: எஸ்பி வேலுமணி மன்னிப்பு கேட்க டெல்லி சென்றதாக கூறியுள்ளீர்கள். ஆனால் அவர்கள் வந்த பிறகு பாஜக கூட்டணி நிலைப்பாட்டை மாற்றி இருக்க வேண்டுமே. ஆனால் அதிமுக உறுதியாக தானே உள்ளது
தேனி கர்ணன்: அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் போட்டனர். அங்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. கூட்டத்தில் நடந்தது பற்றி கட்சி பொதுச்செயலாளர் கூற வேண்டும். ஆனால் கேபி முனுசாமி பிரஸ்மீட் கொடுத்தார். எடப்பாடி பழனிச்சாமி மட்டும் வெளியே பேசினால் உச்சநீதிமன்ற தீர்ப்பு, தேர்தல் ஆணைய தீர்ப்பு, கொடநாடு வழக்கு என்னவாக போகிறது என்பது தெரியும். அதோடு ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு வழக்க தூசித்தட்டிஎடுப்பார்கள். இதனால் தான் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்பி வேலுமணி பேசவில்லை. பலிகடாவாக கேபி முனுசாமி பேசியுள்ளார். அவரும் கொஞ்ச நாளுக்கு பிறகு எதுவும் பேசமாட்டார். அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிக்க கூறினார்கள்.
கேள்வி: பாஜகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியை சமாதானம் பேச வருவதாகவும், எடப்பாடி பழனிச்சாமி முடிவை மாற்ற முடியாது என கூறிவிட்டதாகவும் வருகிறதே?
தேனி கர்ணன்: இதுபற்றி எடப்பாடி பழனிச்சாமி தான் பேச வேண்டும். பாஜக பேச வருகிறார்கள். நான் ஜெயலலிதாவின் கொள்கையை பின்பற்றுகிறேன். கூட்டணிக்கு மறுத்துவிட்டேன். நான் சமாதானம் ஆகமாட்டேன். மதவாத சக்தியோடு கூட்டணி வைக்க மாட்டேன். சாதியவாத சக்தியோடு கூட்டணி வைக்க மாட்டேன் என எடப்பாடி பழனிச்சாமி சொல்ல வேண்டும். இதை செய்தால் இன்று அவரை எதிர்க்கும் நாங்கள் அனைவரும் அவரை ஏற்றுக்கொள்கிறோம். மற்றபடி யாராவது பேசினால் அதனை கணக்கில் ஏற்றுக்கொள்ள முடியாது.
கேள்வி: பாஜகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி வெளியேறினால் தேர்தல் ஆணையம், நீதிமன்றங்களில் தீர்ப்பு மாறி வரும் என கூறுகிறீர்களே? எந்த அடிப்படையில் இதனை சொல்கிறீர்கள்?
தேனி கர்ணன்: நீதிமன்றங்களில் வழக்கு உள்ளது. சசிகலா வழக்கு தொடர்ந்துள்ளார். அவரை நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. ஒட்டுமொத்த பொதுக்கழு, செயற்குழு கூடி கடைக்கோடி கிளை கழக செயலாளர்கள் அனைவரின் அபிடபிட்டும் தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. சும்மா பொதுச்செயலாளர் என கூறிவிட முடியாது. வழக்கு இல்லையென்றால் பிரச்சனையில்லை. ஆனால் வழக்கு உள்ளது. நீதிமன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைக்காதா?. நீதிமன்றத்தில் எங்களுக்கும் நீதி கிடைக்க வாய்ப்புள்ளது நாடாளுமன்ற தேர்தலுக்குள்.
கேள்வி: தேர்தல் ஆணையம், நீதிமன்றம் மாற்றி தீர்ப்பு சொல்லும் என சொல்கிறீர்கள். பாஜகவின் பக்கம் எடப்பாடி பழனிச்சாமி பாஜக பக்கம் உள்ளதால் அவருக்கு சாதகமாக வருகிறது என்ற குற்றச்சாட்டை சொல்கிறீர்கள். எடப்பாடி பழனிச்சாமி பாஜகவை விட்டு வெளியே போய்விட்டார் என்றால் நீங்கள் பாஜக பக்கம் சென்று உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வாங்க போகிறீர்களா?
தேனி கர்ணன்: இல்லை. எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வேண்டாம். நியாயமான தீர்ப்பு மட்டுமே போதும். தேர்தல் ஆணையம், நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமான தீர்ப்பை கொடுத்துள்ளது. ஆனால் அதிமுகவின் பைலா என்ன சொல்கிறது என்பது நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு தெரியாது. இது ஒன்றரை கோடி தொண்டர்களின் இயக்கம். இந்தியா முழுவதும் பரவி உள்ளது. இதனால் தான் கடைக்கோடி தொண்டன் தான் தலைவரை தீர்மானிக்க வேண்டும் என எம்ஜிஆர் பைலாவில் எழுதியுள்ளார். கூடிய விரைவில் எடப்பாடி பழனிச்சாமி தவிர்த்து அனைவரும் சசிகலா தலைமையில் ஒன்றுபட போகிறோம். சசிகலா தான் தலைமையேற்று கட்சியை வழிடத்த உள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40க்கும் 40 எடுப்பார்கள். தமிழ்நாட்டில் திமுகவுக்கு மிகப்பெரிய தோல்வி கிடைக்கும். இந்த மாற்றம் வரும்'' என்றார்.












Click it and Unblock the Notifications