ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம்.. அண்ணாமலைக்கு கடும் கண்டனம்.. எடப்பாடி அதிரடி தீர்மானம்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கடும் கண்டனம் தெரிவித்து அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் இன்று மணிக்கு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் கோஷமிட்டதாகவும் தெரிகிறது.

இந்த தீர்மானம் குறித்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய அண்ணாமலையை கண்டித்து அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அண்ணாமலை அவதூறு பரப்பியுள்ளார். ஜெயலலிதா பற்றி எந்த விதமான அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் இல்லாமல் அண்ணாமலை பேசியுள்ளார். அவருடைய இந்த பேட்டி அதிமுக தொண்டர்கள், மக்களின் மனதை காயப்படுத்தி கொந்தளிப்பையும் கோபத்தையும் ஏற்படுத்திவிட்டது.
1998 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி அமைய காரணமாக இருந்தவர் ஜெயலலிதா. பாஜக மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட பெருந்தலைவர்கள் ஜெயலலிதா மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜெயலலிதா மீது மதிப்பு இருந்தது.
சென்னையில் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் பிரதமர் மோடி நிறைய ஆலோசனைகளை நடத்தியுள்ளார். அப்படிப்பட்ட உன்னத தலைவியை பொது வெளியில் அவதூறாக அண்ணாமலை பேசியதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜக 20 ஆண்டுகளாக தமிழக சட்டசபையில் பிரதிநிதிகள் இல்லாமல் இருந்த நிலையில் அக்கட்சிக்கு 4 எம்எல்ஏக்களை பெற்றுத் தந்தவர் எடப்பாடி பழனிசாமி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுகவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து வரும் நிலையில் கூட்டணி கட்சியான அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். நேற்று ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் 1991- 1996 ஆம் ஆண்டு கால கட்டத்தில் ஊழல் நடந்ததாக ஒப்புக் கொள்கிறீர்களா என நெறியாளர் கேட்டதற்கு ஆம், முன்னாள் முதல்வர்கள் சிறை தண்டனையை அனுபவித்தார்கள் என ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார்.
இது அதிமுகவினருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணாமலைக்கு தலைவராக இருக்கும் தகுதியே இல்லை. அவருக்கு நாவடக்கம் தேவை. எங்கள் கட்சித் தலைவியை வரலாறு தெரியாமல் அரசியல் தெரியாமல் விமர்சித்துள்ளார்.
இதை எப்படி நாங்கள் லேசில் எடுத்துக் கொள்ள முடியும். இனி அண்ணாமலை இப்படியே பேசினால் வாங்கிக் கட்டிக் கொள்வார். காலை மிதித்தால் நாங்களும் மிதிப்போம். கூட்டணியை தொடர்வது குறித்து மறுபரிசீலனை செய்ய நேரிடும் என தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாமல் கூட்டணி தலைமையை ஆலோசிக்காமல் தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெல்வோம் என்றும் தென் சென்னையில் வெற்றியை பாஜகவுக்கு உரிதாக்குவோம் என அமித்ஷா தெரிவித்திருந்தார். இது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications