எடப்பாடிக்கு "கை காட்டி" “தாமரை”க்கு தலைவலி தரும் சீனியர் ர.ர.க்கள் - மாறுகிறதா தேர்தல் கணக்கு?
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் உடனான உட்கட்சிப் பிரச்சனை ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரஸுடன் இணைந்து 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும் என்று மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓ.பி.எஸ். தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகளை கடந்து 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.
ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.

பொதுச்செயலாளர் இபிஎஸ்
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டார். அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு போட்டியாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை நீக்கினார் ஓ.பன்னீர்செல்வம்.

பாஜக கணக்கு
இப்படி இரு தரப்பினரும் மாறி மாறி நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்க, பாஜகவில் கணக்கு என்னவென்று புரியாமல் பலரும் குழம்பி நிற்கின்றனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தனக்குதான் பாஜகவின் ஆதரவு இருப்பதாக நினைக்கையில், எடப்பாடி பழனிசாமி தரப்போ பொதுக்குழுவில் பிரதமர் மோடியை பாராட்டும் தீர்மானத்தையே நீக்கி அதிருப்தியை சம்பாதித்ததாக கூறப்படுகிறது. அதே நேரம் அண்ணாமலையுடன் டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க சென்ற எடப்பாடி பழனிசாமியின் முயற்சியும் தோல்வை தழுவி இருக்கிறது.

2024 தேர்தல்
இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கு இப்போதே பல கட்சிகள் தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக 2024 தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக இருக்கக்கூடாது என்றே அக்கட்சியின் சீனியர் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தி வருகிறார்கள் என IANS செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் அண்ணாமலையின் தீவிரமான பேச்சுக்களால் அதிமுகவின் சிறுபான்மை வாக்கு வங்கி சரிவதாகவும், அதை மீட்டெடுக்க காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது அவர்கள் விருப்பமாம்.

அலர்ட்டாகும் எடப்பாடி
அண்ணாமலையின் வருகைக்கு பிறகு தமிழ்நாட்டில் களம் அமைத்து உள்ள பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகளால் அதிமுக ஓரம்கட்டப்படும் என்ற உணர்வு எடப்பாடி பழனிசாமிக்கும் இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் கருத்துக்களும் அதுவாகவே இருக்க, அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனையிலும் அவர் இறங்கி இருக்கிறாராம். பாஜகவுடன் கூட்டணி தொடர்ந்தால் அதிமுக தமிழ்நாடு அரசியலில் இருந்து ஓரம்கட்டப்படும் என்று அக்கட்சி வட்டாரங்களில் பேச்சு அடிபடுவதாக ஐ.ஏ.என்.எஸ். தெரிவிக்கிறது.
Recommended Video

காங்கிரஸ் கருத்து
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு என்று எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் இருந்தாலும் திமுக தங்களுக்கு உரிய அங்கீகாரத்தை தருவதில்லை என்றே அக்கட்சி கருதுகிறது. இதுகுறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் அந்த செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கையில், "தமிழ்நாடு காங்கிரஸ் நேரடி அரசியலுக்கு வராவிட்டால் தமிழ்நாட்டில் திட்டமிட்டே ஓரம்கட்டப்படும். அதிமுக, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளும் நல்ல நிலையில் இல்லை. இந்த சூழலில் இரு கட்சிகளும் நல்ல கூட்டணி அமைத்தால் அது புத்துணர்ச்சி அளிப்பதுடன் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பெரிய பாதையாக அமையும்." என்றார்.












Click it and Unblock the Notifications