10+1 கேட்கும் பாமக? அதிமுக கறார்? இழுபறிக்கு காரணம் என்ன? அன்புமணி எந்த தொகுதியில் போட்டி?
சென்னை: அதிமுக- பாமக இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இழுபறி நீடிப்பதற்கு என்ன காரணம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் அதிமுக, திமுக மும்முரமாக நடத்தி வருகிறது.

அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இவர்களில் கொமதேக, இந்திய முஸ்லீம் லீக் கட்சி, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு எந்த தொகுதிகள் என்பதும் எத்தனை தொகுதிகள் என்பதும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் மதிமுகவை பொருத்தமட்டில் ஒரு ராஜ்யசபா, ஒரு லோக்சபா தொகுதிகளை கேட்கிறது.
உதயசூரியன் சின்னம்: அவை கிடைக்கும் பட்சத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என மதிமுக மறுத்து வருகிறது. பம்பரம் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தையும் மதிமுக அணுகியுள்ளது. அது போல் காங்கிரஸும் விசிகவும் அதிக தொகுதிகளை கேட்பதால் இழுபறி நீடித்து வருகிறது.
இந்த நிலையில் பாஜகவை எடுத்துக் கொண்டால் தற்போதைக்கு ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கட்சி, ஏசி சண்முகத்தின் புதிய நீதி கட்சி உள்ளிட்டவை இணைந்துள்ளன. அதிமுக கூட்டணியில் பூவை ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம் இணைந்துள்ளது.
பாமக- தேமுதிகவிடம் பேச்சு: அதை தொடர்ந்து பாமக, தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டணி தொடர்பாக தைலாபுரம் தோட்டத்தில் இரு முறை ராமதாஸை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வந்தன.
இந்த நிலையில் மீண்டும் அக்கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளை ஒதுக்குமாறு பாமக கேட்கிறது. ஆனால் அதிமுகவோ 8 தொகுதிகள் வரை ஒதுக்கக் கூடும் என தெரிகிறது. அது போல் பாமக ஒரு ராஜ்யசபா சீட்டையும் கேட்டு வருகிறது.
ராஜ்யசபா சீட்: ஆனால் அதிமுக இந்த முறை யாருக்கும் ராஜ்யசபா சீட் கொடுக்க போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. தற்போது அதிமுகவுக்கு 62 எம்எல்ஏக்கள் இருப்பதால் 34 எம்எல்ஏக்களுக்கு ஒரு ராஜ்யசபா எம்பி என்ற வீதம் அக்கட்சிக்கு கிடைப்பதே ஒன்றுதான் இருக்கும். அதை மற்ற கட்சிக்கு விட்டு கொடுப்பது இயலாது என்பதால் ராஜ்யசபா சீட்டை ஒதுக்க மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுக கொடுக்கும் சீட்: எனவே ராஜ்யசபா சீட்டை மறந்துவிட்டு அதிமுக கொடுக்கும் 8 தொகுதிகளை ஏற்றால் அதிமுக- பாமக இடையே பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் என தெரிகிறது. அதிமுக கூட்டணியில் தற்போதைக்கு பெரிய கட்சி என யாரும் இல்லை. எனவே பாமகவை எப்படியாவது இணைத்துக் கொண்டால்தான் இந்த முறை அதிமுக ஓஹோ என இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது வெற்றி பெறும். சமயோஜிதமாக அதிமுக செயல்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் ராஜ்யசபா சீட் பாமகவுக்கு கிடைக்காத பட்சத்தில் அன்புமணி ராமதாஸ் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் போட்டியிட்டால் தருமபுரி அல்லது வட தமிழகத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட கூடும் என தெரிகிறது.
பாமக 7 தொகுதிகளில் போட்டி: கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்த பாமக 7 தொகுதிகளில் போட்டியிட்டது. அந்த 7 தொகுதிகளிலும் வெல்லவில்லை. இந்த முறையாவது போட்டியிடும் தொகுதிகளில் பாமக வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் உள்ளது. மேலும் இந்த வெற்றி வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாமக தலைமையிலான கூட்டணிக்கு அச்சாரமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications