அதிமுக கோட்டையை பாமகவுக்கு ஒதுக்கியது நியாயமா... பூந்தமல்லி, விருத்தாசலத்தில் அதிமுகவினர் போராட்டம்!
சென்னை: அதிமுக வெற்றியை நிலை நாட்ட வாய்ப்புள்ள சில தொகுதிகளை பாமகவுக்கு ஒதுக்கிவிட்டதாக கூறி சில இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
பூந்தமல்லி, விருத்தாசலம் ஆகிய தொகுதிகளை பாமகவிற்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
இதுமட்டுமில்லாது பல இடங்களில் பாஜக, பாமகவுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் அதிமுகவினர் அதிருப்தி காட்டி வருவதாக கூறப்படுகிறது.

பாமக-அதிமுக தொகுதி பங்கீடு
அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு ஓரளவு முடிந்துள்ளது. இன்னும் தமிழ் மாநில காங்கிரசுக்கு மட்டும் தொகுதிகள் ஒதுக்க வேண்டியது உள்ளது. அதிகபட்சமாக பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக-பாமக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன்னதாகவே பாமக, வன்னியர்கள் இட ஒதுக்கீடு கோரிக்கையை கையில் எடுத்தது. அதன்பின்னர் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையின்போதும் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராம்தாஸ் ஆகியோர் வன்னியர் இட ஒதுக்கீட்டை அழுத்தம், திருத்தமாக அதிமுக தலைமையிடம் வலியுறுத்தினார்கள்.

எதிர்ப்பு காட்டாத பாமக
இதனால் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்பின்னர் அதிமுக கொடுத்த 23 தொகுதிகளை அப்படியே வாங்கிக் கொண்டது. வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறியதால், தொகுதி விஷயத்தில் அதிமுகவுக்கு பாமக எந்த எதிர்ப்பும் காட்டவில்லை.இதனை தொடர்ந்து பாமகவுக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பேச்சுவார்த்தை நடந்தது.

23 தொகுதிகள் ஒதுக்கீடு
அதிமுக தலைமை விரும்பிய தொகுதிகளையே, குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அதிமுக கோட்டையாக உள்ள சில தொகுதிகளை பாமக கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதை ஏற்க மறுத்த அதிமுக, தொகுதி விவரங்கள் குறித்த பேச்சிலும் அதிமுகவை சரிகட்டியது. செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி, நெய்வேலி, திருப்பத்தூர், ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, விருத்தாசலம், காஞ்சிபுரம், கீழ்பென்னாத்தூர், மேட்டூர், சேலம் (மேற்கு), சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம், பூந்தமல்லி, கீழ்வேலூர், ஆத்தூர் ஆகிய தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டன.

பாமகவுக்கு அதிமுக எதிர்ப்பு
அதிமுக வெற்றியை நிலை நாட்டை வாய்ப்புள்ள சில தொகுதிகளை அதிமுக, பாமகவுக்கு ஒதுக்கிவிட்டதாக கூறி சில இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பூந்தமல்லி, விருத்தாசலம் ஆகிய தொகுதிகளை பாமகவிற்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். பூந்தமல்லி தனி தொகுதியை அதிமுகவினருக்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியினர், சுமார் 2 மணி நேரம் கையில் கட்சிக் கொடியுடன் போராட்டம் நடத்தினார்கள்.

சாலை மறியலில் ஈடுபட்டனர்
இதேபோல் விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வனின் ஆதரவாளர்கள் மீண்டும் அவருக்கே வாய்ப்பு வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் வழுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்கள். இதுமட்டுமில்லாது பல இடங்களில் பாஜக, பாமகவுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் அதிமுகவினர் அதிருப்தி காட்டி வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications