விஜயகாந்த் கொடுத்த ஷாக்.. இறங்கி வந்தது அதிமுக.. இனி எல்லாம் சுபம்
Recommended Video

சென்னை: விஜயகாந்த்தின் தேமுதிகவிற்கு திமுக தரப்பிலிருந்து, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் மூலமாக தூதுபோனதால் அதிர்ச்சியடைந்துள்ள அதிமுக, தனது பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டுள்ளது.
பாஜக, பாமக, அதிமுக ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணியில் தேமுதிகவையும் கொண்டுவந்துவிட்டால், அந்த கூட்டணி முழுமை பெற்றுவிடும் என்று அக்கட்சிகள் நினைக்கின்றன.
ஆனால் தேமுதிகவுக்கு 2 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என அதிமுக கூறிவிட்டது.

விஜயகாந்த் இல்லம்
3 நாட்கள் முன்பாக, அதிமுகவுடன் கூட்டணி அறிவிப்பு வெளியிடுவதற்காக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்திருந்தபோது, விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று, அவரிடம் நலம் விசாரித்தார். அப்போது, தேமுதிக நிர்வாகி சுதீஷிடமும் தனியாக அவர் பேசினார். ஆனால் இதுவரை பாஜக, அதிமுக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இணையவில்லை.

பாமக கூட்டணி
இந்த கூட்டணியில் பாமகவிற்கு, 7 லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா பதவியும் தருவதாக அதிமுக அறிவித்துள்ளது. அதேபோன்று தங்களுக்கும் வழங்க வேண்டும் என்பது தேமுதிக தரப்பு கோரிக்கையாக இருந்து வருகிறது. முதலில் 9 தொகுதிகளை கேட்ட தேமுதிக, பிறகு படிப்படியாக குறைத்துக் கொண்டு 5ஆவது தாங்க என கேட்டது.

விஜயகாந்த் பிரச்சாரம் இல்லை
ஆனால் விஜயகாந்த் உடல் நலம் குன்றிய நிலையில், அவர் தேர்தல் பிரச்சாரம் செய்ய மாட்டார் என்பதையும் பிரேமலதா மற்றும் சுதீஷ், பாஜக தலைவர்களிடம் கூறிவிட்டனர். இதுதான் அதிமுகவின் தயக்கத்திற்கு மற்றொரு காரணம். விஜயகாந்த் கட்சிக்கு தமிழக அளவில் செல்வாக்கு சரிந்து விட்டதாக கருதும் அதிமுக தேமுதிக கேட்ட தொகுதிகளுக்கு மறுப்பு தெரிவித்து வந்தது.

திடீர் திருப்பம்
இந்த நிலையில்தான் திடீர் திருப்பம் நேற்று அரங்கேறியது. காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் நேற்று விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். கூட்டணி குறித்து பேசியதாக திருநாவுக்கரசர் பின்னர் நிருபர்களிடம் சூசகமாக தெரிவித்துவிட்டுச் சென்றார். இது அதிமுக வயிற்றில் புளியை கரைத்துள்ளது. திருநாவுக்கரசரை வரவைத்ததே விஜயகாந்த்தான் என்கிறார்கள். அதேபோல திருநாவுக்கரசர் போகும்போதே, எல்லா நிருபர்களுக்கும் போன் போட்டு சொல்லிவிட்டதும், இதில் கவனிக்கத்தக்கது. எல்லாம் காரணமாகத்தான்.

இறங்கிப்போகும் அதிமுக
இந்த நிலையில், அதிமுக 5 தொகுதிகளை தேமுதிகவுக்கு கொடுத்துவிடலாம் என முடிவு செய்துள்ளதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது. திருநாவுக்கரசர், விஜயகாந்த்தின் சினிமா காலம் தொட்டே, நீண்ட கால நண்பர். அவரே நேரடியாக தலையிட்டுவிட்டதால், விஜயகாந்த் திமுக பக்கம் போய்விடும் வாய்ப்புள்ளதாக அதிமுக நினைக்கிறது. எனவே, தேமுதிகவுக்கு 5 தொகுதிகளை வழங்கும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. தேமுதிக திமுக பக்கம் போகாது என்று இன்று காலை நிருபர்களிடம், பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்தது இதன் பின்னணியில்தான் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications