திமுக என்றால் இரண்டு கொம்பு முளைத்தவர்களா? டாஸ்மாக்கில் கள்ளச்சாராயம்! எகிறி அடித்த எடப்பாடி பழனிசாமி
சென்னை: சேலத்தில் டாஸ்மாக் கடையிலேயே கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது எனவும், திமுக என்றால் இரண்டு கொம்பு முளைத்தவர்களா என கேள்வி எழுப்பியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. மேலும், தமிழ்நாடு முழுக்க கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மரக்காணம் மரணங்களில் இருந்தோ, நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களில் இருந்தோ இந்த ஸ்டாலின் மாடல் அரசு ஒரு பாடம் கூட கற்கவில்லையா?

"போலீஸுக்கு பணம் கொடுத்து தான் விற்கிறோம்" என்று கள்ளச்சாராயம் விற்பவன் தைரியமாக சொல்லும் அளவிற்கு கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப்படுத்தியுள்ளதற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு வெட்கப்பட வேண்டும்.
போதாக்குறைக்கு, "திமுக கட்சிக்காரன்" எனும் அடையாளம் வேறு. திமுக என்றால், இரண்டு கொம்பு முளைத்தவர்களா? அவர்கள் எந்த தவறு செய்தாலும் காவல்துறை கண்டுகொள்ளாதா? தமிழ்நாட்டில் நீங்கள் ஆட்சிக்கு வந்தது, உங்கள் கட்சி அடையாளத்தை லைசன்சாக பயன்படுத்தி, சகல குற்றங்களையும் திமுகவினர் செய்வதற்கு தானா திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே?
உடனடியாக இந்த கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்வதோடு, எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி அனைவர் மீதும் சட்ட நடவடிக்கையை உறுதிசெய்யவேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், தமிழ்நாடு முழுக்க கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.
என்ன நடந்தது?: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வளையமாதேவி பிரிவு சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதற்கு எதிரே உள்ள இடத்தில் கள்ள சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது .இது தொடர்பாக இருவர் வீடியோ எடுத்திருக்கிறார்கள்.

அந்த வீடியோவில் பேசிய நபர்கள் திமுகவைச் சேர்ந்த கல்லாநத்தம் ஜோதிவேல், பாலு ஆகியோர் தான் கடை வைத்திருக்கிறார்கள். போலீசாருக்கு மாமுல் கொடுத்து தான் கடை நடத்துகிறோம். உங்களுக்கு தேவையானதையும் கொடுக்கிறோம் என பேசி உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் மதுவிலக்கு போலீசார் அங்கு சென்றனர்.
அப்போது டாஸ்மாக் கடைக்கு எதிரே கள்ளச் சாராயம் விற்பது தெரிய வந்த நிலையில் இது தொடர்பாக சக்திவேல், சுரேஷ் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மேலும் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக கள்ளாநத்தம் பகுதியைச் சேர்ந்த திமுக வர்த்தக அணி அமைப்பாளர் ஜோதிவேல், ஆத்தூர் நகராட்சி 18 வது வார்டு கவுன்சிலர் கங்கையம்மாளின் கணவரும் வார்டு செயலாளருமான ரவி ஆகியோரை ஆத்தூர் ஊரக போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். மேலும் 26 வது வார்டு திமுக செயலாளர் இளங்கோ மன்னனை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications