அஜித் ரசிகர்களின் வாக்குகளை அறுவடை செய்ய அதிமுக ஆர்வம்! 1 மணி நேரத்துக்கும் மேல் நீடித்த சந்திப்பு!
சென்னை: நடிகர் அஜித்குமார் ரசிகர்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்ய அதிமுக ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.
அஜித்குமாரின் தந்தை மறைவு குறித்து துக்கம் விசாரிக்கச் சென்ற 2 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அஜீத்தோடு ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
அதில் நிச்சயம் அஜீத் அரசியல் பற்றி பேசியிருக்க வாய்ப்பில்லை என்ற போதும், அந்தச் சந்திப்பு குறித்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

அஜீத்குமார்
நடிகர் அஜீத்குமாரை பொறுத்தவரை அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கி தான் உண்டு தன் நடிப்புண்டு என்று இருப்பவர். கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவில் பேசிய அஜீத்குமார், சினிமா இண்டஸ்ரிக்குள் அரசியல் வேண்டாம் என்றும் தங்களை சிலர் மிரட்டி வர வைப்பதாகவும் கருணாநிதியிடம் நேரடியாகவே விழா மேடையில் வைத்து கம்ப்ளைன்ட் செய்தார். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெயலலிதா நினைவிடம்
அஜீத்குமாரை திமுக மிரட்டியதா, ஏன் அப்படி பேசினார், என்ன காரணம் என்பது குறித்தெல்லாம் அப்போது இது குறித்து பரபரப்பாக ஊடகங்களில் பேசப்பட்டன. அதேவேளையில் அஜீத்குமார் விரும்பியோ விரும்பாமலோ அவரை ஜெயலலிதா ஆதரவாளராக சிலர் சித்தரிக்கத் தொடங்கினர். அதற்கேற்றார் போல் ஜெயலலிதா மரணத்தின் போது பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்த அஜீத்குமார் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியதும் ஜெயலலிதா நினைவிடம் சென்று மரியாதை செலுத்திவிட்டு தான் வீட்டுக்கே சென்றார்.

பொதுவான நபர்
இது போதாதா, உடனே அஜீத்தை அதிமுக அனுதாபியாக காட்டுவதற்கான முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் அதிலிருந்து உஷாராக விலகியிருந்த அஜீத்குமார், கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நேரில் சென்று ஸ்டாலினிடம் நலம் விசாரித்து சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார். இதன் மூலம் தாம் பொதுவான நபர் என்பதையும் அரசியல் சாயம் பூசிக் கொள்ள விரும்பவில்லை என்பதையும் அஜீத் உணர்த்தினார்.

மாஜி அமைச்சர்கள்
இதனிடையே இப்போது மீண்டும் அஜீத்குமாரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் துக்கம் விசாரிக்கும் சாக்கில் சந்தித்து பேசி வருகின்றனர். அஜீத் தந்தை மறைவின் போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தியதோடு அஜீத் குமாருக்கு ஆறுதலும் சொல்லியிருந்தார். அதிமுகவின் பிரதிநிதியாக ஜெயக்குமார் சென்று வந்த நிலையில், மீண்டும் 2 முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜூவும், சி.விஜயபாஸ்கரும் அஜீத் குமாரை சந்தித்து துக்கம் விசாரித்துள்ளனர்.

ரசிகர்கள் வாக்கு
அஜீத்குமாரோடு எடப்பாடி பழனிசாமி தரப்பு நட்புறவை பேண விரும்புவதையே இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன. அஜீத் ரசிகர்களின் வாக்குகளை முழுமையாக அறுவடை செய்யும் வகையில் அதிமுக காய்நகர்த்தி வருவதையே இது காட்டுகிறது. இதனிடையே அஜீத்துடனான சந்திப்பு குறித்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில், அஜீத் குமாருடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசும் வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.

அஜீத் விஜய்
அஜீத்குமாரின் அனுபவமும், மனப்பக்குவமும் நிறைந்த பேச்சில் எதார்த்தமும், உண்மையும், பிறருக்கு உதவ வேண்டும் என்கிற தூய மனமும் இருப்பது வெளிப்பட்டதாக சி.விஜயபாஸ்கர் புகழ்ந்துள்ளார். அஜீத்தை அதிமுக அனுதாபி என்ற பிம்பத்திற்குள் கொண்டு வர சிலர் விரும்புவது போல் நடிகர் விஜயை திமுக அனுதாபி என்ற பிம்பத்திற்குள் கொண்டுவர ஒரு காலத்தில் சிலர் முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.

புகைப்படம் இல்லை
இதில் குறிப்பிட்டு கவனிக்க வேண்டிய விவகாரம் என்னவென்றால், தனது தந்தை மறைவுக்காக துக்கம் விசாரிக்க வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உட்பட ஆளுங்கட்சி பிரமுகர்களை அஜீத் சந்திக்கும் புகைப்படங்கள் எதுவும் வெளியாகாதது தான். இதன் மூலம் அரசியலுக்கும் அஜீத்குமாருக்கு வெகு தூரம் இடைவெளி இருக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது.












Click it and Unblock the Notifications