மேட்டரே வேற..நெடுஞ்சாலை நகரில் பரபர விவாதம்! கட் அண்ட் ரைட்டாக பேசிய செங்கோட்டையன்! ஷாக்கான எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: அதிமுகவின் மிக மூத்த சீனியர்களில் ஒருவரான செங்கோட்டையனின் பேச்சு அதிமுகவில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் செங்கோட்டையனின் பேச்சுக்கு காரணம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலம் நெடுஞ்சாலை நகரில் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடந்த விவாதம் தான் எனவும், அதன் காரணமாகவே சில சீனியர்களை ஓரம் கட்ட எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டதாகவும், தற்போது அதுவே புதிய விவகாரமாக வெடித்துக் கிளம்பி இருப்பதாக கூறுகின்றனர் அதிமுக நிர்வாகிகள்.
கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த அதிமுகவில் மீண்டும் புயல் வீச தொடங்கியுள்ளது எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்ட விழாவில் ஜெயலலிதா எம்ஜிஆர் படங்கள் இடம் பெறவில்லை என அந்த நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளார் முன்னாள் அமைச்சரும் கட்சியின் மிக மூத்த சீனியருமான செங்கோட்டையன்.

அவிநாசி அத்திக்கடவு திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தும் அதில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை.
இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த அவர் விழா குழுவினரிடம் மேடையில், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை வைக்க வேண்டும் என கூறியும் அவர்கள் படங்கள் இல்லை எனவும், அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்காக நிதி உதவி வழங்கியதோடு, அதற்கு அடித்தளமாக இருந்த ஜெயலலிதாவின் படம் வைக்கப்படவில்லை. அதனால் கலந்து கொள்ளவில்லை என விளக்கமும் அளித்திருந்தார்.
இந்த நிலையில் செங்கோட்டையனின் பேச்சு புகைப்படங்கள் வைக்கப்படவில்லை என்பதற்கான அல்ல, எடப்பாடி பழனிச்சாமி மீதான கோபத்தின் வெளிப்பாடு தான் அது என்கின்றனர் அதிமுகவினர். குறிப்பாக சேலம் நெடுஞ்சாலை நகரில் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் நடந்த விவாதம் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என்கின்றனர். மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் சேலம் நெடுஞ்சாலை நகரில் எடப்பாடி பழனிச்சாமியை முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, கேபி அன்பழகன், சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
ஏற்கனவே சட்டமன்றத் தேர்தல் தொடங்கி மக்களவைத் தேர்தல் வரை பல தேர்தல்களை அதிமுக படுதோல்வியை அதிமுக சந்தித்திருக்கிறது. கட்சியிலிருந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் வெளியேற்றப்பட்டதால் அதிமுக பலவீனமாக காட்சியளிக்கிறது. இதை வைத்து எதிர்க்கட்சியினரும் அதிமுகவை பலவீனமாக இருப்பதாக விமர்சித்து வருகின்றனர். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. மேலும் சசிகலா, ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்தால் தொண்டர்கள் பலமும் நிர்வாகிகள் பலமும் மேலும் அதிகரிக்கும். எனவே அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்களாம்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ அதற்கு சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட செங்கோட்டையனும், சிவி சண்முகமும் சசிகலா, ஓபிஎஸ்ஐ மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என உறுதியாக பேசியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் அப்போது சசிகலா மீண்டும் கட்சிக்குள் வரவேண்டும் என செங்கோட்டையனும், சிவி சண்முகமும் வலியுறுத்தி பேசியது எடப்பாடி பழனிச்சாமியை ரசிக்க வைக்கவில்லை.
இதன் காரணமாக தனக்கு எதிராக சதி நடப்பதாக உணர்ந்த அவர் செங்கோட்டையன், சிவி சண்முகம், கேபி அன்பழகன் ஆகியோரை ஓரங்கட்ட தனது ஆதரவு முன்னாள் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்தே எடப்பாடி ஆதரவு சீனியர்கள் செங்கோட்டையன் உள்ளிட்ட சீனியர்களை ஓரம் கட்டி இருக்கின்றனர். கட்சி அலுவலகத்தில் நடக்கும் கூட்டங்களில் கூட அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே நீண்ட நாட்களாக அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் தற்போது ஜெயலலிதாவின் புகைப்படத்தை காரணமாக சொல்லி பிரச்சினையை கிளப்பி இருக்கிறார். மேலும் ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் கோகுல இந்திரா உள்ளிட்ட சிலரும் அடுத்தடுத்து பேசுவார்கள் என்கின்றனர் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications