அதிமுகவில் அணுகுண்டை போட்ட செங்கோட்டையன்..வெடுக்கென முகத்தை திருப்பிய எடப்பாடி! இதுதான் பிரச்சினையா?
சென்னை: அமைதியாக இருந்த அதிமுகவில் மீண்டும் அணுகுண்டை போட்டுள்ளார் செங்கோட்டையன். எடப்பாடி பழனிசாமி மீது ஆறு மாதத்திற்கு மேலாகவே செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் வரும் 5ஆம் தேதி மனம் திறந்து பேசுவேன் எனக் கூறி அதிர வைத்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள்தான் செங்கோட்டையனின் கோபம் மீண்டும் அதிகரிக்கக் காரணம் என்கின்றனர் அதிமுகவினர்.
அதிமுக என்றாலே அனுதினமும் ஏதாவது ஒரு பிரச்சனை என்ற ரீதியில்தான் தற்போது இருக்கிறது. ஜெயலலிதா இருந்தவரை ராணுவக் கட்டுப்பாட்டோடு இருந்த இயக்கம் அதற்குப் பிறகு பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.
2011 தேர்தலைத் தொடர்ந்து 2016 தேர்தலிலும் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த ஜெயலலிதா திடீரென உடல்நலக்குறைவால் காலமானார். அதற்குப் பிறகு அதிமுகவில் அரங்கேறியது எல்லாம் திரைப்படத்தில் வருவதைவிட அதிரடியான காட்சிகள் தான்.

ஓபிஎஸ் சசிகலா
ஓபிஎஸ் முதல்வரானது, ராஜினாமா செய்தது, சசிகலா சிறைக்குச் சென்றது, எடப்பாடி முதல்வரானது என அடுத்தடுத்து பல்வேறு அதிரடிகள் அரங்கேறின. இறுதியாக ஆட்சியை காப்பாற்ற ஓபிஎஸ் ஆதரவு தேவை என்ற நிலையில் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை வெளியேற்றினார் எடப்பாடி பழனிசாமி. ஆட்சி முடிந்ததும் பன்னீர்செல்வத்தையும் கழற்றிவிட்டார். 2024இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது. ஏற்கனவே கூட்டணியில் இருந்த பாஜக சில தொகுதிகளில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது.
அதிமுக கூட்டணி
2026 தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி மீண்டும் அமைந்திருக்கிறது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு சில சீனியர்கள் நெருக்கடி கொடுப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும், அப்போதுதான் 2026 தேர்தல் வெற்றி பெற முடியும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இந்நிலையில் அதிமுக மூத்தவர்களில் ஒருவரான செங்கோட்டையன் மீண்டும் போர்க்கொடி தூக்கி இருக்கிறார். செப்டம்பர் 5ஆம் தேதி வெளிப்படையாக மனதில் உள்ளவற்றை பேசுவேன் என அதிர வைத்திருக்கிறார்.
செங்கோட்டையன்
எடப்பாடிக்கு எதிராக தனி அணியாக செயல்படலாம் அல்லது கட்சியிலிருந்து அவர் வெளியேறலாம் எனச் சொல்லப்படுகிறது. அவருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகிகளும் திரண்டு நிற்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்ற போது ஜெயலலிதாவின் புகைப்படங்களை மேடையில் இடம்பெறச் செய்யவில்லை என போர்க்கொடி தூக்கி இருந்தார் செங்கோட்டையன். அடுத்தடுத்து ஊடகங்களிலும் அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக பிளவு
அதற்குப் பிறகு அந்த விவகாரம் ஓய்ந்த நிலையில் தான் மீண்டும் போர்க்கொடி தூக்கி இருக்கிறார். அதற்கு என்ன காரணம் என விசாரித்த போதுதான் சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர் அவரது ஆதரவாளர்கள். அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.
அதிமுக தலைமையகம்
ஆனால் மேடையில் அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனைப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டாராம். மேலும் கடைசி வரை 'நல்லா இருக்கீங்களா' எனப் பெயருக்குக் கூட கேட்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. திட்டமிட்டே தன்னை எடப்பாடி பழனிசாமி புறக்கணிப்பதால் கோபத்தோடு கூட்டத்திலிருந்து வெளியேறினாராம் செங்கோட்டையன். அதன் விளைவாகவே தற்போது தனது சொந்த ஊரில் ஆதரவாளர்களைக் கூட்டி ஆலோசனை நடத்தியதோடு எடப்பாடி பழனிசாமிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறார் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications