ஏங்க நாங்க வளந்துட்டோம்.. எடப்பாடியிடம் 50 சீட் கேட்ட பாஜக? பரபரப்பான அதிமுக தலைகள்!
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகிவிட்ட நிலையில், அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாஜக 50 தொகுதிகளை கோரியுள்ளதாக வெளிவந்த தகவல் அதிமுக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தது ஒரு மக்களவை தொகுதிக்கு 1 சட்டமன்ற தொகுதி என சுமார் 40 தொகுதிகளை பாஜக கேட்பதால் எடப்பாடி பழனிசாமி அதிருப்தியில் இருக்கிறார் என்கின்றனர்.
தமிழக அரசியல் களம் சற்றே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. 2026 சட்டப்சபைத் தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களே இடையில் இருந்தாலும், முக்கிய கட்சிகள் முன்கூட்டியே தங்களது கூட்டணி நிலைப்பாடுகளை உறுதி செய்யத் தொடங்கிவிட்டன.

அதிமுக தற்போது பாஜக, தமாகா ஆகிய கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தாலும், பாமக, தேமுதிக போன்ற கட்சிகளையும் இணைக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், பாஜக மற்றும் அதிமுக இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.
அதிமுக பாஜக கூட்டணி
கடந்த மாதம் பாஜக தேசியத் தலைமைக்குழு உறுப்பினர் பைஜெயந்த் பாண்டா, எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது இதற்கான தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது. வெளிப்படையாக இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என சொல்லப்பட்டாலும், அரசியல் வட்டாரங்கள் இதை தொகுதி பேச்சுவார்த்தையின் ஆரம்பக்கட்டமாகக் கருதுகின்றன. தற்போது பாஜக அதிமுகவிடம் 60 தொகுதிகள் வரை கேட்டு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொகுதி பங்கீடு
அதிமுக தரப்பில் கடந்த முறை கொடுத்த 20 தொகுதிகளை மீண்டும் தரலாம் என சொல்லப்பட்ட நிலையில், பாஜக இம்முறை நாங்கள் தமிழகத்தில் மூன்று மடங்கு வளர்ச்சி கண்டுள்ளோம் என வலியுறுத்தி கூடுதல் தொகுதிகள் கேட்டது எடப்பாடி பழனிசாமிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் கோவை, நெல்லை, மதுரை, நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட 9 தொகுதிகளில் பாஜக இரண்டாம் இடத்தை பிடித்தது. இதனையே சுட்டிக் காட்டி இப்போது தமிழக அளவில் நாங்கள் வலுவான கட்சியாக இருக்கிறோம் எனக் கூறி அதிக சீட் கேட்டுள்ளனர் பாஜகவினர்.
எடப்பாடி பழனிசாமி
மாவட்டத்துக்கு குறைந்தது ஒரு தொகுதி, குறிப்பாக முக்கிய கோயில்கள் உள்ள பகுதிகளான ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், பழநி, நெல்லை உள்ளிட்ட ஆன்மீக சிறப்பு வாய்ந்த தொகுதிகளையும் என அதிமுகவிடம் சீட் பேரம் நடத்தியுள்ளனர் பாஜக தரப்பினர். இதில் அதிமுக முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளும் அடங்கியுள்ளதால், எடப்பாடி பழனிசாமி தரப்பு பதட்டத்தில் ஆழ்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பாஜக 50 தொகுதி
மேலும், அமித் ஷா சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் 50 தொகுதிகளை குறிவைத்து வேலை செய்யுங்கள்" என கூறிய உத்தரவை பாஜக தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி, வெற்றி வாய்ப்புள்ள 60 தொகுதிகளையும் வேட்பாளர் பட்டியலுடனும் தயாராக வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அதிமுக பாமக, தேமுதிக, தமாகா போன்ற கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது. எனவே, பாஜக அதிகபட்சமாக 25 தொகுதிகள் மட்டுமே பெற முடியும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது.
பாமக கூட்டணி
கடந்தமுறை பாமகவுக்கு 23 தொகுதிகள் கொடுக்கப்பட்டதை நினைவூட்டும் அதிமுக, இம்முறை அவர்களுக்கு 25 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் என்றும், அதன்படி பாஜக கேட்கும் சீட் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. ஆனால், நாங்களும் தமிழகத்தில் வளர்ந்துள்ளோம். குறைந்தபட்சம் 40 தொகுதிகள் வேண்டும் என பாஜக உறுதியாக நின்றுள்ளது. இதனால், அதிமுக கூட்டணிக்குள் லேசாக பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றர்.












Click it and Unblock the Notifications