"யார் அந்த சார்.." அண்ணா பல்கலை. விவகாரம்.. தமிழகம் முழுக்க அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. யார் அந்த சார் என்ற பதாகையுடன் போராட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே போலீசார் கைது நடவடிக்கைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.. இந்தச் சம்பவத்தில் ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்தனர்.

அண்ணா பல்கலை. விவகாரம்:
இந்த கொடூரம் நடந்த போது ஞானசேகரன் யாரையோ செல்போனில் அழைத்துப் பேசியதாகவும் அதன் பிறகு அந்த சாருடன் இருக்க வேண்டும் என்பது போலச் சொல்லி மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி குறிப்பிட்டு இருந்தார். எனவே, இந்த விவகாரத்தில் வேறு ஒருவருக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். இருப்பினும், ஞானசேகரன் இந்தச் சம்பவம் நடந்த போது செல்போனை ஏரோபிளேன் மோடில் தான் போட்டிருந்தார் என்றும் சும்மா மிரட்டவே அப்படிச் சொன்னதாக போலீசார் கூறுகிறார்கள்.
இருப்பினும் போலீசார் யாரையோ தப்ப வைக்கவே இதுபோல திசைதிருப்பும் பதிலைச் சொல்வதாக அதிமுகவினர் கூறி வருகிறார்கள். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து மாநிலம் முழுக்க அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி இன்று சென்னை, மதுரை என மாநிலம் முழுக்க போராட்டங்கள் நடந்தது. சில இடங்களில் போலீஸ் அனுமதி தராத போதிலும் அதை மீறி போராட்டங்கள் நடந்தன.
யார் அந்த சார்:
அப்போது "யார் அந்த சார்.." உள்ளிட்ட பதாகைகளுடன் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

வேலூரில் சத்துவாச்சாரியில் உள்ள ஆட்சியர் அலுவலகம் எதிரே சுமார் 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்திற்குத் திரண்டனர். அவர்கள் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகச் சொல்லி போலீசார் அவர்களைக் கைது செய்தனர். அதேபோல விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
எடப்பாடி கண்டனம்:
இது மட்டுமின்றி சென்னை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நாமக்கல் என மாநிலம் முழுக்க அதிமுகவினர் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை போலீசார் கைது செய்தனர். அதிமுகவினர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். யார் அந்த சார் என்ற ஹேஷ்டேக்கில் அவர் ட்வீட் ஒன்றையும் செய்துள்ளார்.
அதில் அவர், "அண்ணா பல்கலை வளாக பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும், தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறுமிகள், கல்லூரி மாணவிகள், பெண்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறி ஆக்கியுள்ள ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் நிலையில், ஆர்ப்பாட்டத்தில் சென்று கலந்து கொண்ட கழகத்தினரை காவல்துறையினர் கைது செய்து அராஜக அடக்குமுறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக தலையீடு:
மக்கள் குரலின் பிரதிபலிப்பான எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயலும் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் திமுகவைச் சேர்ந்தவர், போதைப்பொருள் மாபியா வழக்கில் திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளர், என நீளும் திமுக நிர்வாகிகளின் குற்றப்பின்னணியாலும், ஞானசேகரன் குறித்து வெளிவரும் புகைப்படங்கள் மற்றும் தகவல்களாலும், திமுக அரசு இந்த வழக்கிலும் ஏதேனும் அரசியல் தலையீடு ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுக்கிறது.
அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டுப் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும்! இந்த வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர் யார்? #யார்_அந்த_SIR ?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications