”2 ஆண்டுகளாக லேப்டாப், 4 ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் வழங்கவில்லை”அதிமுகவை விளாசிய அமைச்சர் பிடிஆர்!
சென்னை: அதிமுக ஆட்சியில் 2 ஆண்டுகளாக லேப்டாப் மற்றும் 4 ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் வழங்காமல் திட்டத்தை நிறுத்திவிட்டதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார்.
மதுரை மத்தியத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கணேசபுரம் தெருவில் 8.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பேவர் பிளாக் சாலையை நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், வளர்ச்சி, நிதி மேலாண்மை ஆகியவற்றைவிட மனிதாபிமானம் மிகமுக்கியம். அதன் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி பல்வேறு முகாம்கள் அமைத்து பணியாற்றி வருகிறது என்று தெரிவித்தார்.
பெட்ரோல் குண்டு வீச்சு.. இன்று மாலைக்குள் அனைவரும் கைது - திருமாவளவனிடம் டிஜிபி உறுதி
விரைவில் நடவடிக்கை
தொடர்ந்து, எனக்கு முதல்வர் அளித்துள்ள துறைகளில் மனிதவள மேலாண்மை துறையில் தகவல் அறியும் உரிமை சட்டம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், லஞ்ச ஒழிப்பு துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் கொண்டுள்ளது. இவற்றில் லஞ்ச ஒழிப்பு துறைக்கு இதுவரை இல்லாத அளவிற்கு நிதி மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் லஞ்ச ஒழிப்புத் துறையில் பல்வேறு வழக்குகள் குவிந்து வந்துகொண்டிருக்கிறது. அதனை பொதுவெளியில் சொல்ல முடியாது. விரைவில் விளைவுகளை சந்திப்பார்கள் என்று தெரிவித்தார்.
ஆபி உதயகுமார் மீது விமர்சனம்
தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, தேவையற்ற விவாதங்களை உருவாக்கும் பொய்யான தகவல்கள் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசி வருகிறார். குறிப்பாக அவர், சிறந்த ஆன்மீகவாதி , முன்னாள் முதல்வருக்கு கோவில் கட்டி சில ஆண்டுகள் செருப்பு கூட போடாமல் இருந்தவர். தற்போது அவர்களை மறந்தது போல் உள்ளார். அமைச்சராக இருந்தவர் தவறான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
தாலிக்கு தங்கம் திட்டம்
தொடர்ந்து, மின்சார கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வும் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது அதனை கடந்த ஆண்டு நிதி பற்றாக்குறையுடன் ஒப்பிட்டு பேசுவது அடிப்படை புரிதல் இல்லாதது. குறிப்பாக இலவச லேப்டாப் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கல் திட்டம் உள்ளிட்டவைகள் அதிமுக ஆட்சியில் நிறுத்திவிட்டனர். இந்த நிலையில் தாலிக்கு தங்கம் திட்டத்தை மாற்று பெயரில் கல்லூரி மாணவிகளுக்கு உதவி தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தாலிக்கு தங்கம் நான்கு ஆண்டுகளாக வழங்காமல் இருந்து வந்தது அதிகப்படியான மனுக்களை குவித்தது என்று விமர்சித்தார்.
வருவாய் பற்றாக்குறை குறைப்பு
வருவாய் பற்றாக்குறை குறித்த கேள்விக்கு, ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில் வருவாய் பற்றாக்குறை இல்லாத சராசரி மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. 2016க்கு பின் செயல்திறன், நிதி மேலாண்மை திறன் இல்லாத அரசாக இருந்துவிட்டு, தற்போது எங்களை குறை சொல்வது தவறானது. மத்திய அரசின் பொது நிதியில் இருந்து பெரும் கடன் தொகையை கடந்த ஆட்சியில் எல்லை மீறி ரூ.30,000 கோடிக்கு மேல் சுருட்டி கொண்டனர். கூட்டணி கட்சி என்ற முறையில் மத்திய அரசு கேள்வி கேட்கவும் இல்லை. கடந்த அதிமுக அரசு நிலுவையில் வைத்திருந்த ரூ.62,000 கோடி வருவாய் பற்றாக்குறையை ரூ.47,000 கோடியாக குறைத்துள்ளோம்.
திமுக அரசு நடவடிக்கை
திமுக சட்டமன்ற உறுப்பினர்களே இந்த ஆட்சியில் நிதி மேலாண்மை சரி இல்லை என்று உதயகுமாரிடம் குறை சொல்கிறார்கள் என்று சொல்வது நம்பகத்தன்மையற்றது. பொய்யான தரவுகள், அடிப்படை புரிதல் இல்லாமல் மக்கள் மத்தியில் முன்னாள் அமைச்சர் பேசுவது சரியானது இல்லை. நிதிநிலைமை சீர் செய்வது என்பது வருவாயில் பற்றாக்குறை இல்லாமல் இருப்பதே, எட்டு வருடம் அதிமுக ஆட்சியில் சரிய விட்ட வருவாய் பற்றாக்குறையை மூன்று நான்கு ஆண்டுகளில் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.
சமூகநீதி திட்டங்கள்
அதேபோல், பெண்கள் இலவச பேருந்து பயணம், பொங்கல் பரிசு, காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மாநில அரசின் நிதி கொண்டு சமூகநீதி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். உதாரணமாக காலை உணவு திட்டம் மாநிலம் முழுவதும் விரிவு படுத்த வேண்டியது கட்டாயம் என்று தெரிவித்தார்.