உடனே இங்க இருக்கணும்.. அவசரமாக பறந்த உத்தரவு.. சாட்டையை சுழற்றும் இபிஎஸ்.. நெருங்கும் கிளைமேக்ஸ்!
சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறி இருக்கிறது.. இதனால் அதிமுக கிட்டத்தட்ட பாஜக, பாமகவுடன் மட்டுமே தேர்தலை சந்திக்க உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் முதல்வர் பழனிசாமி இன்று அதிமுக நிர்வாகிகளுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை போட்டுள்ளார்.
அதிமுக கூட்டணியில் இன்று மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் இடம்பெற்று இருந்த தேமுதிக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது. போதிய இடங்கள் கிடைக்கவில்லை என்று தேமுதிக விலகி உள்ளது.
தற்போது வரை அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 இடங்கள் கிடைத்துள்ளது. அதேபோல் பாமகவிற்கு 23 இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தேமுதிகவுக்கு 13 இடங்கள் வரை கொடுக்க அதிமுக முன் வந்த நிலையில் அதை ஏற்றுக்கொள்ளாமல் தேமுதிக விலகி உள்ளது.

ஆலோசனை
இந்த நிலையில் அதிமுக சார்பாக இன்று மாலை அவசர மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து மாவட்ட செயலாளர்களும் சென்னையில் இன்று மாலை இருக்க அதிமுக தலைமை உத்தரவு போட்டுள்ளது. வாய்மொழி உத்தரவு போல அதிமுக தலைமையில் இருந்து மாவட்ட செயலாளர்களுக்கு இந்த உத்தரவு சென்றுள்ளது.

மீதம் உள்ள வேட்பாளர்கள்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகிய நிலையில் இந்த கூட்டம் நடக்கிறது. இதில் பல முக்கிய விஷயங்களை முதல்வர் இபிஎஸ் மாவட்ட செயலாளர்களிடம் தெரிவிக்க இருக்கிறார். அதன்படி முதலாவதாக தேமுதிக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் தேமுதிகவுக்கு கொடுக்க வேண்டிய 13 தொகுதிகளை யாருக்கு ஒதுக்கலாம் அல்லது நாமே போட்டியிடலாமா என்று ஆலோசிக்க உள்ளனர்.

வேட்பாளர் பணிகள்
ஒருவேளை இந்த இடங்களில் அதிமுக போட்டியிட்டால் அதற்கான வேட்பாளர்களையும் தேர்வு செய்ய வேண்டும். இதனால் வேட்பாளர் தேர்வில் கூடுதல் ஆலோசனை செய்வதற்காக இந்த கூட்டம் நடக்க உள்ளது . இது போக வேட்பாளர் தேர்வு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதால் அது தொடர்பான கடைசி கட்ட ஆலோசனை இந்த கூட்டத்தில் செய்யப்படும் என்கிறார்கள்.

கூட்டணி கட்சிகள்
நாங்கள் வேட்பாளர்களை அறிவிக்க போகிறோம். நாங்கள் தேர்வு செய்யும் வேட்பாளர்களை நீங்கள் ஏற்க வேண்டும். அவர்களுக்காக பணிகளை மேற்கொள்ள வேண்டும் போன்ற அறிவிப்புகளை, உத்தரவுகளை இன்று முதல்வர் செய்ய உள்ளார். கூட்டணி கட்சிக்கு கொடுக்கும் இடங்களில் சச்சரவு இல்லாமல் கூட்டணி கட்சிக்காக உழைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

கிளைமேக்ஸ்
தேமுதிக தற்போது கூட்டணியில் இருந்து விலகிவிட்டதால் அதிமுக இனியும் வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் செய்யாது. கூட்டணி கட்சிகளுடன் பேசிவிட்டு நாளை தொகுதி தேர்வு, வேட்பாளர்கள் தேர்வுகளை செய்துவிடும். நாளையே கிளைமேக்ஸ் இதில் வந்துவிடும்.. அதற்கான இண்டர்வல்தான் இன்று நடக்கும் கூட்டம் என்று கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications