சீரியஸாக வந்த ஓபிஎஸ்! ஜாலியாக விசாரித்த ஜெயக்குமார்! அதிமுக அவசர மீட்டிங்.. 4 முக்கிய காரணங்கள்!
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்கியது. இன்று முதல் மே 10ம் தேதி வரை சட்டசபை கூட்டம் நடைபெற்ற உள்ளது. இந்த நிலையில் சட்டசபை கூட்டத்திற்கு முன்பாக இன்று காலை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வழக்கம் போல எம்எல்ஏக்கள் அறையில் நடைபெற்றது.
தற்போது அதிமுக அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்ளும் இன்னொரு கூட்டம் நடைபெறுகிறது. முன்னாள் அமைச்சர்கள், மூத்த எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்ளும் இந்த கூட்டம் நடந்து வருகிறது.

அதிமுக கூட்டம்
இன்று மாலை 6 மணிக்கு பின்பாக அதிமுக அலுவலகத்திற்கு ஒவ்வொரு நிர்வாகிகளாக வந்து கலந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர். மாஸ்க் அணிந்து இருந்த ஓபிஎஸ் கொஞ்சம் இறுக்கமான முகத்துடன் காணப்பட்டார். அதே சமயம் ஜெயக்குமார் நன்றாக சிரித்த முகத்தோடு வந்து, வெளியே நின்று கொண்டு இருந்த கேமரா மேன்களை கிண்டலடித்தார். பின்னர் அங்கு இருந்த பொது மக்களிடம் ஜாலியாக விசாரித்துவிட்டு உள்ளே சென்றார். பின்னர் சிவி சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஒவ்வொருவராக வந்தனர்.

மொத்தம் 4 விவகாரங்கள்
மொத்தம் 4 விவகாரங்கள் பற்றி இந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் பேச உள்ளனர். முதல் விஷயம் சொத்து பொது விவகாரங்கள். அதாவது சொத்து வரி உயர்வு, அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதான புகார். தமிழ்நாடு அரசின் பெட்ரோல் வரி குறைப்பு கோரிக்கை, முதல்வர் ஸ்டாலினின் அமீரக பயணம் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி இன்று ஆலோசனை செய்ய உள்ளனர். இதில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

அதிமுக உட்கட்சி 25
இரண்டாவது விஷயம் அதிமுக உட்கட்சி தேர்தல். இந்த தேர்தலில் அதிமுக நிர்வாகிகள் சிலர் ஆங்காங்கே மோதிக்கொண்டதாக புகார் வைக்கப்பட்டது. மொத்தம் அதிமுகவின் அமைப்பு சார்ந்த 25 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த மாவட்டங்களில் சில இடங்களில் கோஷ்டி மோதல், உட்கட்சி மோதல் நடைபெற்றது. இந்த நிலையில் அது பற்றி ஒன்றிய, நகர, பேரூராட்சிகளை சேர்ந்த அ.தி.மு.க கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் ஆகும் இது.

மீதம் உள்ள 49 மாவட்டங்கள்
இந்த கோஷ்டி மோதல் பற்றி ஆலோசனை செய்ய உள்ளனர். அதோடு இந்த கூட்டத்தில் அடுத்த கட்ட தேர்தல் குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளனர். அதிமுகவில் அமைப்பு சார்பாக மொத்தம் 74 மாவட்டங்கள் உள்ளன. இன்னும் 49 மாவட்டங்களில் தேர்தல் நடக்க வேண்டும். இந்த மாவட்டங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தலாமா அல்லது பல கட்டமாக தேர்தல் நடத்தலாமா என்று ஆலசோனை செய்யும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.

மாவட்ட செயலாளர்கள்
மூன்றாவது விஷயம் இதுவரை புதிதாக் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு அமைப்பு ரீதியாக பணிகளை கொடுப்பது. புதிதாக நியமிக்கப்பட்ட செயலாளர்களுக்கு என்ன மாதிரியான பணிகளை வழங்குவது. மாவட்ட அளவில் அவர்களை எப்படி வழி நடத்துவது என்று இதில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாம். அதோடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வலுவான இடங்களில் தோல்வி அடைந்தது பற்றியும் இதில் பேசப்பட உள்ளதாம்.

சசிகலா
நான்காவது விஷயம் - சசிகலா. சசிகலாவிற்கு ஆதரவாக ஆங்காங்கே அதிமுகவில் குரல்கள் கேட்டு வருகின்றன. கடந்த மாத தொடக்கத்தில் இந்த ஆதரவு குரல்கள் அதிகம் இருந்தன. ஆனால் இப்போது அந்த குரல்கள் வெகுவாக குறைந்துள்ளது. சசிகலாவிற்கு ஆதரவாக இருப்பவர்கள் குறித்தும், கட்சி கட்டுப்பாடுகள் பற்றியும் இன்று நடக்கும் கூட்டத்தில் ஆலோசனை செய்வார்கள் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications