தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கவில்லை.. திடீரென எடப்பாடி அறிவிக்க காரணம் என்ன? பின்னணி
சென்னை: அதிமுக கூட்டணியில் தவெக இணையப் போவதை போன்ற பிம்பத்தை தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி விதைத்து வந்த நிலையில், திடீரென யூடர்ன் போட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தற்போது விளக்கம் கொடுப்பதற்கு பின் என்ன காரணம் என்பதை பார்க்கலாம்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், தவெகவுக்கு அரசியல் ரீதியாக அதிமுக நேரடியாகவே ஆதரவுக் கரம் நீட்டியது. முதல்நாள் முதலே எடப்பாடி பழனிசாமி தவெகவுக்கும், விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வந்தார். சட்டசபையிலும் கூட தவெகவின் குரலாகவே எடப்பாடி பழனிசாமி கரூர் விவகாரத்தை அணுகினார்.

அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார கூட்டத்தில் அதிமுக தொண்டர் ஒருவரின் கைகளில் தவெக கொடி இருந்தது. அதனை பார்த்த எடப்பாடி பழனிசாமி, அங்க பாருங்க.. பிள்ளையார் சுழி போட்டாச்சு.. கொடி பறக்குது.. ஆரவாரம் என்று பேசினார். நேரடியாகவே தவெக கொடியை பார்த்து பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று எடப்பாடி பழனிசாமி பேசியது அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிசாமியின் பேச்சைத் தொடர்ந்து ஆர்பி உதயகுமார், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட பலரும் விஜய் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் விஜய் கட்சியையே காலி செய்துவிடும் என்றும் கூறி வந்தனர். இதற்கு தவெக தரப்பில் எந்த ரியாக்ஷனும் இல்லை. அதேபோல் எடப்பாடியின் பிரச்சாரத்தில் நாளுக்கு நாள் தவெக கொடிகள் அதிகரித்து கொண்டே சென்றன.
இதனால் அதிமுக கூட்டணிக்கு தவெக செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிமுக தொண்டர்களும் உற்சாகம் அடைந்தனர். ஆனால் நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுகவுடன் தவெக இதுவரை கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதேபோல் தவெகவுடன் அதிமுகவும் கூட்டணி பற்றி பேசவில்லை என்று விளக்கம் கொடுத்தார்.
பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று கூறியதற்கு பின் புதிய விளக்கத்தையும் எடப்பாடி பழனிசாமி கொடுத்தது அதிமுக தொண்டர்களுக்கே அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி ஏன் திடீரென கூட்டணி பற்றி விளக்கம் கொடுத்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுகுறித்து விசாரித்த போது, நவம்பர் 5ஆம் தேதி தவெகவின் சிறப்பு பொதுக்குழு நடக்கவுள்ளது. அந்தப் பொதுக்குழுவில் தவெக தலைவர் விஜய் தவெக தலைமையில் மட்டுமே கூட்டணி என்று அறிவிக்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. முதல்வர் வேட்பாளர் விஜய் மட்டுமே என்பதை தவெக விட்டுக் கொடுக்க விரும்பவில்லை.
இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூட்டணிக்கு அணுகிய போது, பெரிதாக எந்த சிக்னலும் கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே விஜய் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாகவே அமைதி காத்து வந்தார். தற்போது விஜய் அறிவிப்பதற்கு முன்பாக நாம் முந்திக் கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி விளக்கம் கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications