அம்மான்னு பெயர் வச்ச அதிமுக! சிவி சண்முகம் யார் தெரியுமா? உங்களுடன் ஸ்டாலின் கேசில் திமுக பரபர வாதம்
சென்னை: தமிழ்நாட்டில் அரசு திட்டங்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்கள் மற்றும் படங்களைப் பயன்படுத்துவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் சுடசுட விசாரணை நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை 15-ஆம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தைத் தொடங்கிவைத்தார். நவம்பர் மாதம் வரை நடைபெறும் இத்திட்டத்தின் கீழ், பொதுமக்களின் தேவைகளை உடனடியாகத் தீர்க்கும் வகையில் அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
மொத்தம் 10,000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. "உங்களுடன் ஸ்டாலின்" என்ற பெயரில் நகர்ப்புறங்களில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் சிறப்பு முகாம்கள் செயல்படுகின்றன. பொதுமக்கள் நேரடியாக இந்த முகாம்களுக்குச் சென்று விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
மேலும், ஜூலை 15 முதல் விண்ணப்பங்கள் வீடுகளுக்கு நேரடியாக வழங்கப்படும். இதற்காகப் பல தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீடுகளுக்கே சென்று விண்ணப்பங்களை வழங்குவார்கள்.
உங்களுடன் ஸ்டாலின் பெயர் தடை
இப்படிப்பட்ட நிலையில் தமிழக திட்டங்களில் தலைவர்களின் பெயர்கள், படங்கள் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. "உங்களுடன் ஸ்டாலின்," "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டங்களில் முதலமைச்சர் பெயர் இருந்தது. இதை எதிர்த்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் வழக்கில் தமிழக திட்டங்களில் தலைவர்களின் பெயர்கள், படங்கள் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இதையடுத்து தமிழக அரசு செய்த மேல்முறையீடு வழக்கில், இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் அவசர விசாரணை நடத்தினார். அதில், அதிமுக வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். "முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் நீங்கள் கொண்டு வந்த எத்தனை திட்டங்களுக்கு ஒரே ஒரு நபரின் பெயரை வைத்திருக்கிறீர்கள்?" என்று அவர் கேட்டார். அதற்கு அதிமுக வழக்கறிஞர் "ஒன்று கூட இல்லை" என்று பதிலளித்தார்.
பொய் சொல்கிறார்கள் - உங்களுடன் ஸ்டாலின்
இதற்கு திமுக தரப்பு "பொய் சொல்கிறார்கள்" என ஆட்சேபணை செய்தது. அதிமுக ஆட்சியிலும், மத்திய அரசு திட்டங்களிலும் தலைவர்கள் பெயர் பயன்படுத்தப்படுகின்றன. "புரட்சித் தலைவர்", "புரட்சித்தலைவி" போன்ற பெயர்களில் திட்டங்கள் இருந்தன. பல உதாரணங்களை காட்ட முடியும் என திமுக குறிப்பிட்டது. அதிமுக தரப்பு "அம்மா என்பது யாருடைய தனிப்பட்ட பெயர் கிடையாது, அது ஒரு பொதுவான பெயர்" என வாதிட்டது.
உங்களுடன் ஸ்டாலின் வழக்கு - அம்மா பெயர்
அதற்கு நீதிபதிகள் சிரித்தபடியே பதில் அளித்தனர். "ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான், தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் அம்மாவாக இருக்கலாம்" என்றனர். திமுக வழக்கறிஞர் வில்சன் குறுக்கிட முயன்றபோது, நீதிபதிகள் அறிவுறுத்தினர். "நீங்கள் பேசிக்கொண்டிருந்தபோது அதிமுக வழக்கறிஞர்களை குறுக்கிட வேண்டாம் என்று நாங்கள் சொன்னோம், அந்த விஷயத்தை நீங்களும் கடைபிடிக்க வேண்டும் என்று நினைக்கிறோம்" என்றனர். அதற்கு வில்சன் "இனி அப்படி செய்ய மாட்டேன்" என்று தெரிவித்தார்.
இந்த மனுவை தாக்கல் செய்த சி.வி. சண்முகம் மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். ஆனால், முந்தைய அதிமுக ஆட்சியில் இவர் மாநில அமைச்சராக இருந்தார். அப்போது 22 அரசு திட்டங்களுக்கு ஒரே நபரின் பெயர் இருந்தது என்று தமிழக அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்ந்து சுடசுட விசாரணை செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications