அல்வா போல் செங்கோட்டையனுக்கு 2 பதவி! நேரடியா விஜய் கூட தான் டீலிங்! சேர்ந்தவுடனே அடித்த அதிர்ஷ்டம்!
சென்னை: இரண்டு கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணைய இருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன். இந்த நிலையில் கட்சியில் சேர்ந்த உடனேயே அவருக்கு இரண்டு பெரிய பொறுப்புகள் வழங்கப்பட இருக்கிறது. அது மட்டுமில்லாமல் விஜய்யுடன் நேரடி தொடர்பில் இருக்கும் வகையில் செங்கோட்டையனுக்கு அங்கீகாரம் வழங்கப்பட இருக்கிறது. தற்போதைய சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தின் மிக மூத்த அரசியல்வாதி என்ற பொறுமையும் பெற இருக்கிறார் செங்கோட்டையன்.
அதிமுகவில் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் பல தசாப்தங்களாக முக்கிய முகமாக விளங்கிய மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக எடுத்த நிலைப்பாட்டால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
எம்ஜிஆர் முதன்முதலாக முதல்வராக பதவி ஏற்ற 1977-ஆம் ஆண்டில் எம்எல்ஏ ஆன செங்கோட்டையன், அதன் பின் 1991-இல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போதும் அமைச்சர் உள்ளிட்ட உயர்ந்த பொறுப்புகளை வகித்தவர். அதிமுகவின் மிகப் பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்களை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

செங்கோட்டையன் தவெக
ஜெயலலிதாவின் பயணத் திட்டங்களை செயல் வடிவில் கொண்டு வந்த முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகவும், கொங்கு மண்டலத்தில் வலுவான சமுதாய ஆதரவு கொண்ட தலைவராகவும் செங்கோட்டையன் நீண்ட காலம் அறியப்பட்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் அவருக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் குறைந்தது என்ற அதிருப்தி கடந்த சில ஆண்டுகளாகவே வெளிப்பட ஆரம்பித்தது. இதன் உச்சமாக, சில மாதங்களுக்கு முன்பு அவர் செய்தியாளர் சந்திப்பின் போது எடப்பாடி மீது பல்வேறு குற்றசாட்டுகளை தெரிவித்தார்.
விஜய் கட்சி
பின்னர் நடந்த சமரச முயற்சிகளும் பயனளிக்கவில்லை. அதிமுகவில் இருந்து பிரிந்த தலைவர்களையும் மீண்டும் ஒன்றுபடுத்த வேண்டும் எனக் கூறிய அவரது பேச்சு கட்சியில் அதிர்வலை ஏற்படுத்தியது. இதையடுத்து, முதலில் அவரின் கட்சிப் பதவிகளும், பின்னர் அடிப்படை உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது. இந்நிலையில், செங்கோட்டையன் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைவது உறுதியாகியுள்ளது.
செங்கோட்டையன்
கடந்த 24 மணி நேரத்தில் நடந்த பல அரசியல் நிகழ்வுகள் செங்கோட்டையன் தவெகவில் இணைவது உறுதி தான் என தெளிவுபடுத்தியுள்ளன. இந்நிலையில், அதுவும் பல கட்ட ஆலோசனைக்குப் பிறகே அவர் கட்சியில் இணைவதை உறுதி செய்திருக்கிறார். முதற்கட்ட ஆலோசனையில் தவெக தலைவர் விஜய், செங்கோட்டையன், தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு தலைவர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பல முக்கிய விவாதங்கள் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய சந்திப்பு
அதன்பின் இரண்டாம் கட்டமாக, விஜய் - செங்கோட்டையன் - வியூக ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி ஆகிய மூவரும் ஒரு மணி நேரம் தனிப்பட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட உள்ள பொறுப்புகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் கூறபடுகிறது. தற்போது கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில், தவெகவில் செங்கோட்டையனுக்கு முக்கியமான இரண்டு பொறுப்புகள் வழங்கப்படுகின்றன.
கொங்கு மண்டலம்
முதலாவது நிர்வாகக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் (Coordinator for Admin Council) பதவி. இதன் மூலம், கட்சியின் கட்டமைப்பு, நிர்வாகப் பொறுப்புகளில் ஒருங்கிணைப்பு, பிரிவுகளின் செயல்பாட்டை வலுப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை அவர் மேற்கொள்வார். 2வது கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவி. கொங்கு பகுதியில் தவெகவின் வலிமையை அதிகரிக்க வேண்டிய பொறுப்பு முழுமையாக செங்கோட்டையனின் தோள்களில் வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியின் தேர்தல் வியூகம், பிரச்சார முறை, அமைப்பு கட்டமைப்பு போன்றவை குறித்து ஜான் ஆரோக்கியசாமியுடன் இணைந்து அவர் தீர்மானிப்பார்.
கொங்கு மண்டலம்
மேலும், செங்கோட்டையன் நேரடியாக தலைவர் விஜய்க்கே ரிப்போர்ட் செய்வார் என்பதும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவாகியுள்ளது. இது, அவருக்கு தவெகவில் வழங்கப்படும் முக்கியத்துவமும் பொறுப்பும் எவ்வளவு உயர்ந்தது என்பதையும் காட்டுகிறது. அதிமுகவின் பழம்பெரும் தலைவரான செங்கோட்டையனின் வருகை, தவெகவுக்கு அமைப்பு ரீதியாகவும், வியூகம் ரீதியாகவும் உறுதியாக பலன் தரும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் உள்ள அவரின் செல்வாக்கு, விஜயின் புதிய அரசியல் பயணத்திற்கு ஒரு முக்கிய பலமாக அமையும் என மதிப்பிடப்படுகிறது.












Click it and Unblock the Notifications