"அதிமுக மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்”.. அமித்ஷாவுக்கு உடனடி பதில் கொடுத்த எடப்பாடி!
சென்னை: பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கூட்டணி ஆட்சி என்ற அமித் ஷாவின் பேச்சை நிராகரித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக வெற்றி பெற்றால் 'கூட்டணி ஆட்சி' என மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தெரிவித்தார். 'கூட்டணி ஆட்சி' என அமித் ஷா கூறவில்லை என எடப்பாடி பழனிசாமி பேசி வரும் நிலையில், ஆட்சியில் பாஜக பங்கேற்குமா? என்ற கேள்விக்கு, 'ஆம்' என அமித் ஷா பதில் அளித்துள்ளார்.

அண்மையில் தமிழ் நாளிதழ்களுக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும், அதில் பாரதிய ஜனதா அங்கம் வகிக்கும் எனவும் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றார்.
இந்நிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், அந்த அரசில் பாஜக அங்கம் வகிக்குமா என்ற கேள்விக்கு, ஆம் என்று அமித் ஷா பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில் இதுபற்றி இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "நான்தான் ஏற்கெனவே சொல்லிவிட்டேனே.. தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்." என்று கூறியுள்ளார்.
அமித் ஷா கூட்டணி ஆட்சி என்று கூறிய நிலையில், அவரது பேச்சை நிராகரிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications