அஞ்சு கட்சி அமாவாசை செந்தில் பாலாஜி.. இந்தி திணிப்பை அதிமுக எதிர்க்கும்.. ஜெயக்குமார் பதிலடி!
சென்னை: இருமொழிக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசை எதிர்க்க துணிவின்றி எடப்பாடி பழனிசாமி எங்கு பதுங்கியுள்ளார் என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். இந்தித் திணிப்பு என்ற வடிவில் வந்தாலும் அதிமுக அதை கடுமையாக எதிர்க்கும் என்று கூறியுள்ள ஜெயக்குமார், தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக் கொள்கையே தொடரும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு என்றும் கூறியுள்ளார்.
மும்மொழிக் கொள்கையை மற்ற மாநிலங்கள் எல்லாம் ஏற்கும் போது, தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி, எடப்பாடி பழனிசாமி எங்கு பதுங்கி உள்ளார் என்று கேள்வி எழுப்பினார். '

தொடர்ந்து, இருமொழிக் கொள்கையே தாரக மந்திரம் என்பதை கொள்கை முழக்கமாக முழங்கிய பேரறிஞர் அண்ணா பெயரை வைத்துள்ள கட்சியின் பொதுச்செயலாளர் என்று கூறி மத்திய அரசை கண்டிக்க கூட துப்பில்லாமல் ஒளிந்திருக்கும் பழனிசாமி, அண்ணாவின் பெயரை விட்டுவிட வேண்டும் என்றும் விமர்சித்தார். செந்தில் பாலாஜியின் கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயக்குமார் தனது எக்ஸ் பதிவில், மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை விடுக்காத மத்திய அரசைக் கண்டித்து, கடந்த 28.08.2024 அன்றே எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுவிட்டார்கள். அன்றைய தினம் புழல் சிறையில் இருந்ததால் "அஞ்சு கட்சி அமாவாசை" பத்து ரூபாய் தியாகி பாலாஜிக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன்.
தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போதே, "அண்ணா- எம்ஜிஆர்- ஜெயலலிதா ஆகியோர் வழியில் தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக் கொள்கையே தொடரும்" என ஆகஸ்ட் 2020ல் அறிவித்தவர் எடப்பாடி பழனிசாமி. இந்தித் திணிப்பு எந்த வடிவில் வந்தாலும், அது மத்திய அரசின் கல்வி கொள்கையே ஆனாலும், அதனை அதிமுக கடுமையாக எதிர்க்கும்.
இருமொழிக் கொள்கையை எப்போதும் வலுவாக நிலைநிறுத்திய அதிமுக மட்டும்தான் ஒரிஜினல் "திராவிட இயக்கம்". தங்கள் பள்ளிகளில் இந்தியை கற்றுக்கொடுத்து, மேடையில் மட்டும் நாடாகமாடும் திமுக, எப்போதும் பொய்வேட "ஸ்டாலின் மாடல்" மட்டுமே. தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது.
இவர்களின் அரசியல் விளையாட்டால் உண்மையில் பாதிக்கப்படுவது தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் தான் என்பதை உணர வேண்டும். கல்விக்கொள்கை உட்பட எந்த ஒரு காரணத்தைக் காட்டியும், நம் மாணவர்களுக்கு சேர வேண்டிய நிதி ஒருபோதும் தடைபடக் கூடாது. எனவே தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications