எடப்பாடி பொதுச் செயலாளரான பின் முதல் கூட்டம்! ஏப்ரல் 7இல் நடைபெறும் அதிமுக செயற்குழு! ஏன் முக்கியம்
சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுகவில் பல மாதங்களாகவே ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இடையே மோதல் இருந்து வந்தது அனைவருக்கும் தெரியும். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் வரை எல்லாம் போய் பார்த்தார் ஓபிஎஸ்.
இருப்பினும், இதில் பெரும்பாலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது. சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டும் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றே தீர்ப்பளித்தது..

அதிமுக
அதைத் தொடர்ந்து அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் வழக்கு தொடரப்பட்டது. இது முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. ஏனென்றால், இந்த பொதுக்குழுவில் தான் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வானார். மேலும், ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை நீக்கும் தீர்மானமும் இதில் தான் நிறைவேற்றப்பட்டது. இதிலும் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவாகத் தீர்ப்பு வந்தது.

அதிமுக பொதுச்செயலாளர்
இதற்கு முன்னரே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான நடைமுறைகள் நடந்து முடிந்திருந்தது. தேர்தல் முடிவுகளை அறிவிக்க மட்டுமே நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த தீர்ப்பு வந்தவுடன் சில நிமிடங்களிலேயே எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராகப் பதவியேற்றார். இந்தச் சூழலில், அதிமுக செயற்குழு கூட்டம் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகப் பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அதிமுக செயற்குழு கூட்டம் வருகின்ற 7.4.2023 வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.

செயற்குழு கூட்டம்
இக்கூட்டத்தில், கழக செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் 7.4.2023 அன்று நடைபெறும் எனத் தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஏன் முக்கியம்
விதிப்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் இரண்டு செயற்குழு கூட்டம் மற்றும் ஒரு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த வேண்டும். அந்த அடிப்படையில் இந்தாண்டின் முதற் செயற்குழுவாக இது இருக்கும். அதிமுக உட்கட்சி விதிகள்படி, எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகத் தேர்வாகியுள்ள நிலையில், அதற்கான ஒப்புதலை இந்த செயற்குழு தான் வழங்க வேண்டும். அதன் பின்னர், பொதுக்குழுவும் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரானதற்கு ஒப்புதலை வழங்கும். இதன் காரணமாகவே இந்த செயற்குழு கூட்டம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications