செங்கோட்டையனை மேடையில் வைத்துக்கொண்டே.. அதிமுக மாநில நிர்வாகி பேச்சால் அதிர்ந்து போன கட்சியினர்!
ஈரோடு: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு முதல்வர் பதவி தேடி வந்ததாகவும், ஆனால், அந்தப் பதவியை அவர் நிராகரித்து விட்டதாகவும் அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளர் அப்துல் ஜப்பார் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் பனிப்போர் நிலவி வந்த நிலையில் இப்போதுதான் சற்று ஓய்ந்துள்ளது. சில வாரங்களாக எடப்பாடி பழனிசாமி நடத்திய எந்தக் கூட்டங்களுக்கும் செல்லாமல் புறக்கணித்து வந்த செங்கோட்டையன், அண்மையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று, முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்.

இதனால் எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையேயான கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், செங்கோட்டையன் பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில், அதிமுக மாநில நிர்வாகி பேசிய பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த ஆசனூரில் அதிமுக சார்பில் நேற்று மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் அதிமுக மாநில சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளர் அப்துல் ஜப்பார் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்துல் ஜப்பார் பேசுகையில், "தற்போது கவுன்சிலர் பதவிக்கு கூட சிபாரிசு தேவைப்படுகிறது. ஆனால், செங்கோட்டையனுக்கு முதலமைச்சர் பதவி தேடி வந்த போது கூட, அவர் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். இப்போது சிறிய ஊரில் மாவட்ட செயலாளராக உள்ளார். ஆனால் சந்தோஷமாக இருக்கிறார். படுத்தவுடன் தூங்குகிறார். எந்தக் கவலையும் இல்லை.
மக்களோடு மக்களாக உள்ள கட்சி, மக்களுக்கு சேவை செய்கிற கட்சி அதிமுக. இப்போது நம்முடன் பாஜக சேர்ந்து பலமாக கூட்டணி அமைத்துள்ளது. கடந்த தேர்தல்களில், அதிமுக தோல்வி அடைந்ததற்கு பொதுமக்கள் காரணம் அல்ல. நாம் தான் காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நான் ஒரு இஸ்லாமியன். ஆனாலும், இந்த தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கூறினேன். காரணம், முஸ்லிம்கள் அதிமுக கூட்டணிக்கு ஓட்டு போட மாட்டார்கள். நான் கோவையில் முஸ்லிம் ஜமாத் தலைவராக இருந்தவன். கோவையில் என்ன நிலவரம் என்பது எனக்கு தெரியும். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முஸ்லிம் மக்களுக்கு நிறைய காரியங்கள் செய்தும் கூட அதிமுகவுக்கு அவர்கள் ஓட்டு போடவில்லை.
2024 மக்களவைத் தேர்தலிலும், நம்முடன் இருந்த முஸ்லீம் கட்சிகள் கூட திமுகவுக்கு தான் ஓட்டு போட்டன. இப்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் நமக்கு மிகப்பெரிய பலம் வந்துள்ளது. அதிகாரம் கிடைத்துள்ளது. இன்று அதிகாரம் தான் அனைத்துக்கும் தேவைப்படுகிறது. பாஜக - அதிமுக பலமான கூட்டணியாக வரும்" எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications