அதிமுக 'ஏக்நாத் ஷிண்டே' அடுத்த ஆட்டம்.. ஆளும் கட்சி புள்ளிகளுடன் ரகசிய பேச்சு? பாஜக அசைன்மெண்ட்?
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் தொடர்ந்து கண்காணிக்கப்படும் அக்கட்சியின் ஏக்நாத் ஷிண்டே, ஆளும் கட்சி புள்ளிகளுடன் இடைவிடாமல் தொடர்ந்து பேசிவருவதும் இப்போது 'துரோகப் பட்டியலில்' சேர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறதாம்.
அதிமுகவை பாஜகவின் கங்காணி கட்சியாகவே வைத்திருக்க வேண்டும் என்பதில் அப்படி ஒரு தீவிரமான ஆர்வம் கொண்டவராக இருந்தவர் அதிமுகவின் 2-ம் கட்ட தலைவர்களில் ஒருவரான 'வருங்கால ஏக்நாத் ஷிண்டே'. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் ஆதாயம் பெற்றவர், இப்போது பாஜகவின் தயவில் அனைத்திந்திய அளவில் 'தொழில்கள்' மூலம் அறுவடை செய்து வருகிறார். அதனால் அவருக்கு அதிமுகவை விட பாஜகதான் ரொம்ப முக்கியமாகப் போய்விட்டது.

போராடிப் பார்த்த ஷிண்டே: அண்மையில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வது என்கிற எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு ஆகக் கூடுமானவரை தடுத்துப் பார்த்தார் ஏக்நாத் ஷிண்டே. ஆனாலும் எடப்பாடி பழனிசாமி அசரவில்லை. பாஜகவின் பிரதிநிதியாகத்தான் நம்முடன் இருப்பவர் என தெரிந்தும் அவரை முன்னிலையில் வைத்துக் கொண்டே பாஜகவுக்கு எதிராக ஆட்டம் ஆடுகிறார் எடப்பாடி பழனிசாமி.
அசராமல் ஆடும் 'ஷிண்டே': நீங்க அப்படிப் போன நானும் விடாக் கண்டன் என்ற ரேஞ்சில் எடப்பாடி பழனிசாமி உடன் இருந்து கொண்டே அத்தனை சதித் திட்டங்களையும் பாஜகவுக்காக செய்து வருகிறார் ஏக்நாத் ஷிண்டே. அவர் இப்போது சமூக வலைதளங்களில் பதிவிடும் 'ஒற்றை' வார்த்தைகள் கூட ஓராயிரம் அர்த்தங்களை சொல்வதாகவே கவனிக்கப்படுகிறது.
ஆளும் கட்சி புள்ளிகளுடன் பேச்சு: இந்நிலையில் தென்மாவட்ட மூத்த திமுக தலைகள் சிலருடன் அதிமுக ஏக்நாத் ஷிண்டே பேசியிருக்கிறாராம். பாஜகக கொடுத்துவிட்ட அசைன்மெண்ட்டுக்காகத்தான் இந்தப் பேச்சுவார்த்தை எனவும் கூறப்படுகிறது. ஒருநாள் இல்லாமல் பலநாள் இந்த ரகசியப் பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருப்பதை எடப்பாடி தரப்பும் கண்காணித்து கொண்டிருக்கிறதாம். இதற்கு எல்லாம் அசரக் கூடியவரா 'அண்ணன் ஷிண்டே'... அப்படியும் விளக்கம் கேட்டால், வீட்டுல விஷேசம்ணே.. சமையலுக்கு ஆளை பிடிச்சோம்ணே.. எல்லாம் நம்ம கட்சிகாரங்க வயிறார சாப்பிட்டுப் போகணுங்கிறதுக்காகவே தானே செய்யுறேன் என 'அமைதிப் படை' அமாவாசையை நினைவூட்டும் வசனங்களையும் கைவசம் வைத்திருக்கிறாராம் ஏக்நாத் ஷிண்டே. எலியை எத்தனை நாளைக்கு மடியில் கட்டிக் கொண்டு அலைவது? கட்டுச் சோற்றை அவிழ்க்கவும் முடியலை.. பெருச்சாளியை துரத்தவும் முடியலை என்கிற வேதனையுடன் இருக்கிறதாம் அதிமுக தலைமை.












Click it and Unblock the Notifications