ஒரே நாளில் தமிழிசையின் சந்தோஷத்தை காலி செய்த அஜீத்! #AjithKumar
Recommended Video
சென்னை: நான் அரசியலுக்கு வர மாட்டேன். எனது ரசிகர்கள் எனது பெயர், புகைப்படத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என்று அதிரடியாக அறிவித்து பாஜக தலைவர் டாக்டர் தமிழிசையின் சந்தோஷத்தை காலி செய்து விட்டார் நடிகர் அஜீத்.
திரையுலகில் மிக மிக வித்தியாசமானவர் அஜீத். வெட்டி பந்தாவோ, வீண் பேச்சோ இருக்காது. அதை விட முக்கியமாக நடிப்போடு நின்று கொள்வார். சினிமா விழாக்களுக்குக் கூட போக மாட்டார். அந்த அளவுக்கு தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பவர் அஜீத்.
இந்த நிலையில் நேற்று திருப்பூரில் திடீரென அஜீத் ரசிகர்கள் என்ற போர்வையில் சிலர் பாஜகவில் இணைந்தனர். அதை பாஜகவினர் மிகப் பெரிய செய்தியாக மாற்றி சந்தோஷப்பட்டனர். அதை விட முக்கியமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசையே கூட அஜீத்தை வெகுவாக உயர்த்திப் புகழ்ந்து பேசி புளகாங்கிதமும் அடைந்தார்.
தெளிவாக இருக்கிறேன்.. நான் அரசியலுக்கு வர மாட்டேன்.. அஜீத் அதிரடி!
ஒன்றுமில்லாமல் செய்த அஜீத்
ஆனால் பேசி ஒரு நாள் கூட ஆகவில்லை. அதற்குள் இன்று மாலை தமிழிசையை ஒன்றுமில்லாமல் செய்து விட்டார் அஜீத்.. ஒரு அறிக்கை மூலம். மொத்த ரசிகர்களுக்கும் நான் யார், நாம் யார், நமது வேலை என்ன என்று வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார் அஜீத். சமூக வலைதளங்களில் அஜீத் ரசிகராக இல்லாதோரும் கூட இதைக் கொண்டாடி வருகின்றனர்.
முளையிலேயே கிள்ளி எறிந்து
ரஜினியும் சாதகமாக இல்லை. மறுபக்கம் விஜய் வேறு படங்கள் மூலம் பாஜகவை தொடர்ந்து வறுத்தெடுத்து வருகிறார். இந்த நிலையில் அஜீத் ரசிகர்களை வைத்து ஆதாயம் கிடைக்குமா என பார்க்கத் தொடங்கியது பாஜக. ஆனால் முளையிலேயே அதை கிள்ளி எறிந்து விட்டார் அஜீத்.
நடு மண்டையில் நச்சென்று அடித்து
இதன் மூலம் அவர் சில முக்கிய செய்திகளையும் உணர்த்தியுள்ளார். நான் எந்த புகழாரத்திற்கும் மடங்க மாட்டேன்.. எனது ரசிகர்களை யாரும் தவறாக பயன்படுத்த விட மாட்டேன்.. எந்த நெருக்கடிக்கும் நான் பணிய மாட்டேன்.. என் வேலையில் யார் குறுக்கிட்டாலும் அதை பொறுக்க மாட்டேன்.. என் வேலையைத் தவிர வேறு விஷயத்தில் கவனம் செலுத்த மாட்டேன் என்று ஆணித்தரமாக நடு மண்டையில் நச்சென்று அடித்துச் சொல்லியுள்ளார் அஜீத்.
சேற்றுக்கு நடுவே முளைத்த செந்தாமரை
அஜீத்தின் அறிக்கையும், தைரியமான அறிவிப்பும் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. காரணம், இந்த பாழாய்ப்போன அரசியலுக்காகவும், பதவிக்காகவும், அதிகாரத்திற்காகவும் எத்தனை எத்தனை நடிகர்கள் அடித்து நாறிக் கொண்டுள்ளனர் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதானே உள்ளனர். அவர்களுக்கு சேற்றுக்கு நடுவே முளைத்த செந்தாமரையாக காட்சி தருகிறார் அஜீத்.