திருப்புவனம் அஜித் குமார் மரணம்.. தமிழக டிஜிபிக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!
சென்னை: திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் அஜித் குமார் எனும் இளைஞர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் விளக்கம் கேட்டு தமிழக டிஜிபிக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை வேண்டும் என்று கோரியிருந்த நிலையில் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருப்பதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

கடந்த ஜூன்.26ம் தேதியன்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கோயிலான பத்ரகாளியம்மன் கோயிலுக்கு நிகிதா எனும் பெண், தனது வயதான தாய் சிவகாமியை அழைத்து வந்திருக்கிறார். நிகிதா தனது காரை பார்க் செய்ய சொல்லி, கோயில் செக்யூரிட்டியாக இருந்த இளைஞர் அஜித் குமாரிடம் கூறியுள்ளார். ஆனால் தரிசனம் முடிந்து வந்து பார்த்தபோது காரில் இருந்த நகையை காணவில்லையாம். இது தொடர்பாக புகார் அளித்திருக்கிறார்.
புகாரின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் செக்யூரிட்டி அஜித் குமாரிடம் தங்கள் பாணியில் விசாரணை மேற்கொண்டனர். இதில் அஜித் குமாரின் உடல்நிலை மோசமடையவே மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து உடல் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாது, திமுகவின் கூட்டணி கட்சியினரே போராட்ட களத்தில் குதித்தனர். கடந்த 2021ல் திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதற்கு பின்னர் இன்று வரை சுமார் 25 பேர் காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு உரிய நீதி வேண்டும் என்றும் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம், நகையை காணவில்லை என்று புகார் அளித்த நிகிதா ஒரு மோசடி பேர்வழி என்று குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. பலரிடம் வேலை வாங்கி தருவதாக சொல்லி அவரும், அவரது தாயும், அவரது தந்தையும் கூட்டு சதியில் ஈடுபட்டிருப்பதாகவும் பலரும் கண்ணீர் மல்க பேட்டியில் கூறியுள்ளனர்.
அஜித் குமார் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கிறது. மட்டுமல்லாது இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத்திற்கு வீட்டு மனை பட்டா ஒதுக்கி கொடுத்திருக்கிறார். அதேபோல, அஜித் குமாரின் தம்பிக்கு அரசு பணி ஆணையை வழங்கியுள்ளார். இது காவல்துறை தவறு என்றும் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் உறுதி அளித்துள்ளார்.
மறுபுறம் அஜித் குமாரை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இப்படி இருக்கையில்தான் மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications