Akshaya Tritiya: நாளை அட்சய திருதியை! தங்கம் வாங்கினால் மட்டும் செல்வம் பெருகாது!
சென்னை: அதிர்ஷ்டத்தையும் செல்வ பெருக்கையும் அள்ளிக் கொடுக்கும் அட்சய திருதியை நாளை (ஏப்.19) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கம் வாங்கினால் மட்டும் செல்வம் பெருகாது என்ற தகவல் கேட்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால் விஷயத்தை முழுமையாக தெரிந்து கொண்டால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
இதுகுறித்து ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி கூறியிருப்பதாவது: அட்சய திருதியை என்றாலே நம் நினைவுக்கு வருவது தங்கம் வாங்குவதுதான். ஆனால், "கடந்த ஆண்டு தங்கம் வாங்கி பீரோவில் வைத்தவர்களுக்கு, இந்த ஆண்டு அது பல மடங்கு பெருகியிருக்கிறதா?

தங்கம் வாங்குவதை விடவும், இந்த நன்னாளில் நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம் 'தானம்' மட்டுமே. மகாலட்சுமிக்கு உகந்த சித்திரை மாதத்தில் வரும் இந்த அட்சய திருதியை, உண்மையில் செல்வத்தைப் பெருக்குவதற்கான நாள் மட்டுமல்ல; நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களுக்குக் கொடுத்து மகிழ்வதற்கான நாள்.
மகாலட்சுமிக்கு வாசனை மிகுந்த இடங்கள், சுத்தமான சூழல் மற்றும் மங்களகரமான சொற்கள் பிடிக்கும். எல்லாவற்றையும் விட, பிரதிபலன் பாராமல் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்களிடமே அன்னை நிரந்தரமாகக் குடி கொள்கிறாள் என்பதுதான் இந்த நாளின் சூட்சுமம்.
தன்னிடம் இருந்த ஒரே ஒரு அழுகிய நெல்லிக்கனியை யாசகம் கேட்டவருக்கு மனமுவந்து கொடுத்த அந்த ஏழைப் பெண்ணின் 'தங்கமான மனதைக்' கண்டுதான் மகாலட்சுமி பொன் மழையைப் பொழிந்தாள். எனவே, அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மட்டும் செல்வம் பெருகாது.
தர்மம் செய்யும் எண்ணம் இருந்தால் மட்டுமே அன்னை அருளுவாள். அட்சய திருதியை ஏப்ரல் 19ம் தேதி காலை 10.49 மணிக்கு தொடங்கி, மறுநாள் ஏப்ரல் 20-ஆம் தேதி காலை 7.27 மணி வரை நீடிக்கிறது. வேலைக்கு செல்பவர்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் மகாலட்சுமியின் படத்திற்குப் பூக்கள் சூட்டி, கல்கண்டு சாதம் அல்லது பால் பாயாசம் நெய்வேத்தியம் செய்து வழிபடலாம்.
தங்கம் வாங்க வசதி இல்லாதவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அரிசி, பருப்பு, வெல்லம் அல்லது காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்களை உங்களால் முடிந்த அளவு ஏழைகளுக்குத் தானமாக வழங்கலாம். ஒரு வேளை உணவை ஒருவருக்கு வாங்கித் தருவது கூட மிகப்பெரிய புண்ணியத்தைத் தரும்.
"எண்ணம் போல் வாழ்வு" என்பதால், பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணமே உங்கள் வாழ்க்கையில் வளத்தைக் கொண்டு வரும். புதிய தொழில்கள் தொடங்கவோ, வீடு, வாகனம் அல்லது துணிமணிகள் வாங்கவோ இந்த நாள் மிகவும் ஏற்றது.
எனவே, ஆடம்பரமான செலவுகளைத் தவிர்த்து, எளியவர்களுக்கு உதவி செய்து மகாலட்சுமியின் அருளைப் பரிபூரணமாகப் பெற தேச மங்கையர்க்கரசி அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications