அதிமுக வேட்பாளர் தேர்வில் நடந்த "சம்பவம்".. இதெல்லாம் உண்மையா? அப்படி இருக்கவே வாய்ப்பு இல்லையே!
சென்னை: அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக இன்று இணையத்தில் நிறைய செய்திகள் பரவின.. ஆனால் அதிமுகவிலோ அப்படி கருத்து வேறுபாடு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.. அதிமுக கட்சி எப்போதும் போல ஒற்றுமையாக இருப்பதாக தகவல்கள் வருகிறது... வேட்பாளர் தேர்வில் என்னதான் நடந்தது?
2016 சட்டசபை தேர்தலை போலவே திமுகவிற்கு எதிர்பாராத ஷாக் கொடுத்து மீண்டும் ஆட்சியில் அமரும் திட்டத்தில் அதிமுக இருக்கிறது. இதற்காக இந்த முறை அதிமுக மிகவும் வலிமையான கூட்டணியை அமைத்து உள்ளது.
பாஜகவிற்கு 20, பாமகவிற்கு 23, தேமுதிகவுக்கு (12-18) இடங்கள் ஒதுக்கி மிகப்பெரிய கூட்டணியை அதிமுக உருவாக்கி வருகிறது. இன்னும் சில கட்சிகள் இந்த கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

சிக்கல்
இப்படிப்பட்ட நிலையில் அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்- இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக இன்று இணையத்தில் நிறைய செய்திகள் பரவின. ஓபிஎஸ் தனக்கு ஆதரவான சிலரை போட்டியிட வைக்க வேண்டும் என்று முயற்சி செய்ததாக கூறப்பட்டது.

ஆனால் இல்லை
ஆனால் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இபிஎஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வேட்பாளர் தேர்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக இணையத்தில் செய்திகள் வெளியாகின. சில செய்தி ஊடகங்கள் கூட இதே செய்தியை வெளியிட்டு இருந்தது. இன்று அதிமுக அலுவலகத்தில் நடந்த மகளிர் தின கொண்டாட்டத்தில் நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே கலந்து கொண்டார், எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை

காரணம்
இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் இபிஎஸ் முக்கிய ஆலோசனை ஒன்றில் பிஸியாக இருந்தார். இதனால் இதை வைத்து இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு என்றெல்லாம் செய்திகள் வெளியானது. ஆனால் உண்மையில் அதிமுகவில் தலைவர்களுக்கு இடையே இப்படி கருத்து வேறுபாடு எல்லாம் இல்லை, முக்கியமாக ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை என்று கூறப்படுகிறது.

ஒற்றுமை
வேட்பாளர் தேர்வில் எல்லா கட்சியிலும் நடப்பது போலவேதான் அதிமுகவில் ஆலோசனைகள் நடக்கிறது. இயல்பான, ஆரோக்கியமான விவாதங்கள் மட்டுமே நடக்கின்றன. இதில் புதிதாக கருத்து வேறுபாடு எல்லாம் இல்லை என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக வேட்பாளர் தேர்வு சுமுகமாவே செல்கிறது.

விழா
மகளிர் தின விழாவில் முதல்வர் கலந்து கொள்ளாததற்கு தேர்தல் நேர பணிகள் காரணமாக இருக்கும். இதை எல்லாம் பெரிதுபடுத்த கூடாது. தேவையின்றி அதிமுகவில் பிரச்சனை போல பேசுகிறார்கள். ஆனால் அப்படி எல்லாம் எதுவும் இல்லை. தேர்தலை எதிர்கொள்வது மட்டுமே அதிமுகவின் ஒரே குறிக்கோள் என்று கட்சி மேலிடத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications