கிளாம்பாக்கத்திற்கு வர முடியாது.. கோயம்பேடுதான்.. ஆம்னி பஸ் ஓனர்கள் அடம்.. அரசு என்ன செய்யும்
சென்னை: ஆம்னி பேருந்துகள் நாளை முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்துதான் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்த நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது.
ஒவ்வொரு நாளும் சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே சென்னை பெருநகரத்தின் மக்கள் தொகை 1 கோடியை கடந்திருக்கிறது. இப்படி புலம் பெயர்ந்துள்ள மக்கள் விழா நாட்களில் சொந்த ஊர் திரும்பும்போதுதான் சென்னை புறநகர் பகுதிகளில் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் செல்லும் மக்கள் இதனால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

இந்த சிக்கலை தவிர்க்க தாம்பரம், திருவான்மியூர் போன்ற புறநகர் பகுதிகளில் தென் மாவட்டங்களுக்கு செல்ல பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அவை குறைந்த எண்ணிக்கையில்தான் இயக்கப்படுகின்றன. எப்படி இருந்தாலும் கோயம்பேடு வந்தால்தான் பஸ் கிடைக்கும் என்கிற சூழல் இருக்கிறது. அப்படியே கோயம்பேடு வந்து பஸ் புடிச்சாலும் பெருங்களத்தூரை தாண்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.
இந்த பிரச்னையை சமாளிக்கதான் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. 2019ம் ஆண்டு தொடங்கிய இந்த கட்டுமான பணிகள் இந்த ஆண்டுதான் முடிவடைந்தது. இதனையடுத்து பொங்கலை ஒட்டி பயன்பாட்டுக்கும் வந்தது. அரசு பேருந்துகளை போலவே, ஆம்னி பேருந்துகளும் இங்கிருந்துதான் இயக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்லும் பயணிகள், கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்துதான் டிக்கெட்களை புக் செய்திருக்கிறார்கள் என்றும், எனவே பொங்கல் முடியும் வரை கோயம்பேட்டிலிருந்து பேருந்துகளை இயக்கிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கோரியிருந்தனர். இதனையடுத்து ஜனவரி 24ம் தேதி வரை கோயம்பேட்டிலிருந்து தனியார் பேருந்துகளை இயக்க அரசு அனுமதித்தது.
இந்த கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், நாளை முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக கூறியுள்ளார். இதற்கு அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மறுப்பு தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் அன்பழகன் கூறுகையில், "ஏற்கெனவே பயணிகள் அதிக அளவு முன்பதிவு செய்திருக்கிறார்கள், நகரினுள் வந்து செல்வதற்கு என நீதிமன்றத்தை நாடி சில உத்தரவுகளை பெற்றிருக்கிறோம். அதன் அடிப்படையில் இன்றும் கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்துதான் பேருந்துகள் புறப்படும்.
மட்டுமல்லாது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக தயாராகாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கினால் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பின் ஆம்னி பேருந்துகளை நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ள வரதராஜபுரம் பேருந்து நிலையம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications