நாளை அனைத்து கட்சி கூட்டம்... தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அழைப்பு
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
வாக்காளர் சிறப்பு முகாம் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் நாளை நண்பகல் 12 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.
தேர்தல் ஆணையம் சார்பில் செப்டம்பர் 9 மற்றும் 23, அக்டோபர் 7 மற்றும் 14 ஆகிய நாட்களில் சிறப்பு சரிபார்ப்பு முகாம் நடத்தப்பட்டது. ஆன்-லைன் மூலமும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஜனவரி மாத இறுதியில் மாவட்டம் தோறும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் தற்போது 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 2 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 960 பேர். பெண்கள் 2 கோடியே 98 ஆயிரத்து 60 ஆயிரத்து 765 பேர். இதர பிரிவினர் 5472 பேர் அடங்குவர். இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் 23 மற்றும் 24 ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் சிறப்பு முகாம் தொடர்பாக ஆலோசனை நடத்தவும், தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்க அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அழைப்பு விடுத்துள்ளார்.