மாணவர்கள் செம ஹேப்பி! 9ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ்.. பள்ளிக்கல்வி துறை மாஸ் உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் இறுதி ஆண்டு தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில், பள்ளிக்கல்வித் துறை முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த 2020 மார்ச் மாதம் முதலே, நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது.
வைரஸ் பாதிப்பு இந்தாண்டு தான் குறைந்துள்ள நிலையில், நேரடி வகுப்புகளும் தொடங்கப்பட்டது. மாணவர்கள் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பள்ளிக்குச் செல்ல தொடங்கி உள்ளனர்.

பொதுத்தேர்வு
தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடைபெறும் நிலையில், இதற்கான கால அட்டவணையைக் கடந்த மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி +2 மாணவர்களுக்கு மே 5 முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. இதனைத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மொத்தம் 8.37 லட்சம் மாணவ, மாணவிகள் +2 பொதுத்தேர்வை எழுதினர்.

முடிவுகள்
அதேபோல +1 மாணவர்களுக்கு மே 9 முதல் மே 31 வரை நடைபெற்ற நிலையில், 10ஆம் வகுப்புக்கு மே 6 முதல் 30 வரையும் தேர்வுகள் நடைபெற்றது. அதேபோல இதர வகுப்புகளுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் விடைத்தாள் திருத்தும் மையங்களில் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளும் நடைபெற்றன. இன்னும் சில வாரங்களில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆல்பாஸ்
இந்நிலையில், 9ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் ஆல்பாஸ் செய்யப் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஆண்டு இறுதித்தேர்வு மதிப்பெண்களைக் கணக்கில் எடுக்காமல் ஆல்பாஸ் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இறுதி தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு தனித்தேர்வு நடத்தவும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.

மாணவர்கள் ஹேப்பி
கொரோனா பரவல் காரணமாகப் பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கல்வித் துறை இந்த சலுகையை மாணவர்களுக்கு அறிவித்துள்ளது. கொரோனா பரவல், ஆன்லைன் கல்வி உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் ஏற்கனவே கடும் மன அழுத்தில் உள்ள நிலையில், இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு உற்சாகத்தை அளிப்பதாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications