அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும்.. உடனே சம ஊதியம் வழங்க வேண்டும்.. சீமான் வலியுறுத்தல்
சென்னை: அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் தமிழ்நாடு அரசு குறைவான ஊதியம் வழங்கி வருவது சிறிதும் அறமற்ற செயலாகும். ஆட்சிக்கு வந்தவுடன் சம ஊதியம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் திமுக அரசு ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு, அதற்கு முன் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதைவிட 3000 ரூபாய் அளவிற்கு குறைவாக அடிப்படை ஊதியத்தை வழங்க முடிவெடுத்தது அன்றைய திமுக அரசு. அடிப்படை ஊதியம் குறைவானதன் விளைவாக, மொத்த ஊதியமானது ரூ.15000 அளவிற்கு இன்றளவும் குறைவாக வழங்கப்படுகிறது.

"உரிய நீதி கிடைக்கவில்லை"
அதன் பின்னர், 10 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசும் இடைநிலை ஆசிரியர் இடையே நிலவும் ஊதிய முரண்பாட்டைக் களைய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரே அரசின் நிர்வாகத்தின் கீழ், ஒரே மாதிரியாக பணிபுரியும் ஆசிரியர்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கு மட்டும் குறைவான ஊதியம் வழங்குவது எவ்வகையில் நியாயம்? கடந்த 13 ஆண்டிற்கும் மேலாக தொடரும் இரு திராவிடக் கட்சிகளினது அரசுகளின் இத்தகைய பணியாளர் விரோதப் போக்கிற்கு எதிராக இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு அறவழிப் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால், இன்றுவரை அவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை.

"நேரில் சந்தித்து ஆதரவளித்தேன்"
தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு சென்னையில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடைநிலை ஆசிரியர்களை நேரில் சந்தித்து, அவர்களின் போராட்டக் கோரிக்கைகளுக்கு ஆதரவளித்தேன். அதன் பின்னர், அன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழங்கிய பரிந்துரைக் கடிதத்தையேற்று அப்போராட்டம் தற்காலிகமாகத் திரும்பப்பெறப்பட்டது. எட்டு மாதங்களைக் கடந்தும் எவ்வித தீர்வும் வழங்கப்படாதநிலையில், மீண்டும் 27-12-2018 அன்று சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் ஆசிரியர்கள் முன்னெடுத்த அறவழிப் போராட்டத்திலும் நேரில் பங்கேற்று ஆதரவளித்தேன்.

"திமுக அரசும் ஏமாற்றுகிறது"
அதே நேரத்தில், அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். அத்துடன் நிற்காமல், அதே கோரிக்கையை திமுக தேர்தல் அறிக்கையிலும் இடம்பெறச் செய்தார். இதனை நம்பி, ஆசிரியர்கள் தங்களது முழுமையான ஆதரவினை அளித்து திமுகவினை ஆட்சியில் அமர்த்தினர். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்களாகியும் தேர்தல் வாக்குறுதிப்படி, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைந்து அவர்களுக்கு சம ஊதியம் வழங்காமல் திமுக அரசு ஏமாற்றி வருகிறது.

"சம ஊதியம் வேண்டும்"
நாட்டின் வருங்கால தலைமுறையை செதுக்கும் சிற்பிகளான ஆசிரியர்களிடையே நிலவும் ஊதியப் பாகுபாடு நல்லதல்ல. எனவே அதனை களைந்து உடனடியாக அனைத்து இடைநிலை ஆசிரியப் பெருமக்களுக்கும் சம ஊதியம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications