வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்? 3,324 மேஜைகள்.. 8 மணிக்கு தபால் ஓட்டு.. தேர்தல் அதிகாரி விளக்கம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் செய்யப்பட்டுள்ள விரிவான ஏற்பாடுகள் குறித்து விளக்கியுள்ளார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்.
தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் ( மே 4) எண்ணப்பட உள்ளன. தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசமே ஆவலோடும், ஆர்வத்துடனும் எதிர்பார்த்திருக்கும் மே 4-ம் தேதி, வாக்கு எண்ணிக்கைக்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளதாக அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

இதுகுறித்து, "தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டின் பெருவிழா" என்ற பெருமித்ததுடன் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 க்கான வாக்கு எண்ணிக்கை, மே 4, 2026 அன்று நடைபெறும். 75,064 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் பெறப்பட்ட தபால் வாக்குகள் ஆகியவற்றின் வாக்கு எண்ணிக்கை, இதற்காக அமைக்கப்பட்ட 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடத்தப்படும்.
3,324 மேஜைகள்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVMs) பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 234 வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே வளாகங்களில், தபால் வாக்குகள் மற்றும் மின்னணு முறையில் அனுப்பப்பட்ட தபால் வாக்குகளை (ETPBs) எண்ணுவதற்காக கூடுதலாக 240 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பதிவான வாக்குகளை எண்ணும் பணிக்காக மொத்தம் 3,324 மேஜைகள் பயன்படுத்தப்படும்.
வாக்கு எண்ணும் பணிகள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படும். வாக்கு எண்ணும் பணிக்காக மொத்தம் 10,545 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாக்கு எண்ணும் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதிசெய்ய 4,624 நுண் பார்வையாளர்கள் (Micro Observers) அவர்களுக்கு துணையாக இருப்பார்கள்.
வாக்கு எண்ணும் நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும், ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒருவர் என மொத்தம் 234 வாக்கு எண்ணும் பார்வையாளர்களை (Counting Observers) இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
மூன்றடுக்கு பாதுகாப்பு
தபால் வாக்குகளை எண்ணுவதற்கு, ஒவ்வொரு 500 வாக்குகளுக்கும் ஒரு வாக்கு எண்ணும் மேஜை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, 1,135 கூடுதல் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் செயல்முறையின் நேர்மை மற்றும் சுமூகமான நடத்தையை உறுதி செய்வதற்காக அனைத்து மையங்களிலும் விரிவான மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
* முதல் அடுக்கு (வெளிப்புறச் சுற்றளவு): ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றியும் 100 மீட்டரில் இருந்து பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலத்திற்குள் நுழைவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அடையாளச் சான்றுகளை சரிபார்க்கவும், முறையான உடல் பரிசோதனை செய்யவும் நுழைவு வாயில்களில் போதுமான காவல் துறையினர் நிறுத்தப்படுவார்கள்.
* இரண்டாவது அடுக்கு (நடுப்பகுதி): வாக்கு எண்ணும் வளாகத்தின் நுழைவு வாயில்கள் மாநில ஆயுதப் படையினரால் பாதுகாக்கப்படும். அவர்கள் வளாகத்திற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதோடு, அனுமதியற்ற நடமாட்டம் அல்லது நடமாடுவதைத் தடுப்பார்கள். கைபேசிகள் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்த நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
* மூன்றாவது அடுக்கு (உட்புறப் பகுதி): வாக்கு எண்ணும் அறைகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர (EVM) பாதுகாப்பு அறைகளின் நுழைவாயிலில் அமைந்துள்ள இந்த மிக முக்கியமான பாதுகாப்பு அடுக்கு, மத்திய ஆயுதப் காவல் படையினரால் (CAPF) நிர்வகிக்கப்படும். கைபேசிகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்கள் வாக்கு எண்ணும் அறைகளுக்குள் கொண்டு செல்லப்படாமல் இருப்பதை உறுதி செய்ய கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், உள்ளூர் காவல் துறை மற்றும் மாநில ஆயுதப் படையினருடன் கூடுதலாக, மத்திய ஆயுதக் காவல் படையின் (CAPF) 65 கம்பெனிகள் வாக்கு எண்ணும் மையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
முதல்முறையாக
மேலும், முதல்முறையாக, இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதியற்ற நபர்கள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் ECINET மூலம் QR குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
மூன்றாவது மற்றும் மிக உட்புறப் பாதுகாப்புச் சாவடியில், QR குறியீட்டை ஸ்கேன் செய்து வெற்றிகரமாகச் சரிபார்த்த பிறகு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்த QR குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டைகள், வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் அறைகளுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்கு எண்ணும் பணியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் கட்டாயமாகும்.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கையுடன் தொடங்கும், அதைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும். அனைத்து சட்டமன்றத் தொகுதிகளின் சுற்றுவாரியான முடிவுகள், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் அந்தந்த மையங்களில் உள்ள பொது ஒலிபெருக்கி அமைப்பு மூலம் அறிவிக்கப்படும். இந்த முடிவுகளை ECINET செயலியிலும், results.eci.gov.in என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்' என்று அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications