கேட்டுச்சா.. பொதுக்குழுவில் எல்லாம் சிறப்பா நிறைவேற்றப்படும்! பொடிவைத்து கூறினாரா செங்கோட்டையன்?
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அதிமுகவின் செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‛‛பொதுக்குழுவில் அனைத்து முடிவுகளும் சிறப்பான முறையில் நிறைவேற்றப்படும்'' என கூறியது தற்போது கவனிக்கத்தக்க அம்சமாக மாறியுள்ளது.
Recommended Video
நாளை அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வனகரத்தில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமானது.
இதனால் அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஆனால் பொதுக்குழு நடக்கும் என இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கு
இந்நிலையில் பொதுக்குழுவை கூட்ட தடை விதிக்க வேண்டும் என்ற மனுக்கள் அதிமுகவின் உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். மேலும் இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களைக் கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடை விதிக்கக் கோரி கூடுதல் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார்.

நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை உயர்நீதிமன்றம் இன்று இரவு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி பொதுக்குழு நடத்த தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும் அதிமுகவின் பொதுக்குழுவில் கட்சியின் சட்ட விதிகளை திருத்த தடையில்லை, பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக எந்த இடைக்கால தடையும் பிறப்பிக்க முடியாது எனவும், பொதுக்குழு விதிகளை திருத்துமாறு கோரும் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் கூறியது.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மகிழ்ச்சி
இத்தகைய தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமியின் தரப்புக்கு முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இதனால் தான் தீர்ப்பை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். மேலும் சென்னையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டு முன்பு அவர்கள் குவிந்து ஆதரவு கோஷம் எழுப்பினர்.

தர்மம் வென்றிருக்கிறது
இந்த தீர்ப்புக்கு பிறகு அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கூறுகையில், ‛‛அதிமுகவை பொறுத்தமட்டில் பொதுக்குழு தான் முடிவுகள் செய்யும். என்றைக்குமே பொதுக்குழுவுக்கு முழு அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவில் அனைத்து முடிவுகளும் சிறப்பான முறையில் நிறைவேற்றப்படும். அதிமுக எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு எதிர்க்காலத்தில் வருங்காலத்தில் அனைத்திலும் வெற்றி பெறும் என்பது தான் தீர்ப்பின் எடுத்துக்காட்டு. தர்மம் வென்றிருக்கிறது'' என்றார்.

கவனிக்கத்தக்க வார்த்தை
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் விதிகளை திருத்த தடையில்லை, பொதுக்குழு விதிகளை திருத்துமாறு கோரும் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறிய நிலையில் தான் செங்கோட்டையன், ‛‛பொதுக்குழுவுக்கு முழு அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவில் அனைத்து முடிவுகளும் சிறப்பான முறையில் நிறைவேற்றப்படும்'' என தெரிவித்துள்ளார். இதன்மூலம் பொதுக்குழுவில் தாக்கலாகும் 23 தீர்மானங்கள் தவிர ஒற்றை தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவான முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதை மறைமுகமாக செங்கோட்டையன் தெரிவித்தாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.











Click it and Unblock the Notifications