இங்கிலாந்தில் இருந்து கொரோனா பாதிப்புடன் வந்தவர்கள்.. எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்!
சென்னை: இங்கிலாந்தில் தீவிரமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் மக்கள் அதிக அளவு பாதித்து வருகிறது. அந்நாட்டில் இருந்த தமிழகத்திற்கு வந்தவர்கள் மற்றும் அவர்களில் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது,
இங்கிலாந்தில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று, சாதாரண கொரோனாவை விட அதிக வேகத்தில் மற்றவர்களுக்கு பரவக்கூடியது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் இங்கிலாந்து உடனான சர்வதேச விமான போக்குவரத்தை இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன.

தமிழக அரசு தீவிரம்
இதனிடையே இங்கிலாந்தில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் தமிழகம் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்து அவர்களை பரிசோதித்து தனிமைப்படுத்தும் பணியை தமிழக சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது.

இங்கிலாந்து பயணிகள்
கடந்த நவம்பர் 21 முதல் டிசம்பர் 25 வரை சுமார் 2300 பேர் இங்கிலாந்தில் இருந்து வந்துள்ளதாக சுகாதாரத்துறை மதிப்பிட்டுள்ளது. இதேபோல் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியான பின் டிசம்பர் 21 முதல் டிசம்பர் 23 வரை 49 பயணிகள் இங்கிலாந்தில் இருந்து வந்துள்ளனர்.

தொற்று எப்படி
இங்கிலாந்தில் இருந்து வந்த 2300 பேரில் இதுவரை 1437 பேரை தேடி கண்டுபிடித்து சோதனை செய்துள்ளது. அவர்களில் 12 பேருக்கு மட்டும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 21 முதல் டிசம்பர் 23 வந்த 49 பேரில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சோதனை நடக்கிறது
ஒட்டுமொத்தமாக இங்கிலாந்தில் இருந்த வந்தவர்களில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2300 பேரில் 1437 பேருக்கு சோதனை நடந்துவிட்ட நிலையில் அவர்களில் 1224 பேருக்கு கொரோனா நெகட்டிவ் என்பது உறுதியாகி உள்ளது. 201 பேரின் முடிவுக்காக காத்திருக்கிறோம். மற்ற பயணிகளை கண்காணித்து பரிசோதிக்கும் பணி நடந்து வருகிறது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எந்த மாவட்டம்
தற்போதைய நிலையில் தமிழகத்திற்கு இங்கிலாந்தில் இருந்து வந்து கொரோனா பாதிப்புடன் 13 பேர் உள்ள மாவட்டங்களின் விவரத்தை இப்போது பார்க்கலாம். சென்னையில் 5 பேர், தஞ்சாவூரில் 3 பேர், நீலகிரியில் 2 பேர், தேனி, மதுரை, செங்கல்பட்டில் தலா ஒருவர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்கிலாந்தில் இருந்து வந்து கொரோனா பாதித்தவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தும் வார்டில் வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications