ஜாபர் சாதிக் கைது.. தொடர்புடைய ஒருவரையும் விடக்கூடாது.. பாய்ந்து வந்த பாஜக அண்ணாமலை!
சென்னை: தலைநகர் டெல்லியில் ரூபாய் 2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய ஒருவரையும் விடக்கூடாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தான் டெல்லியில் ரூ. 2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் 50 கிலோ ரசாயன பொருட்களை டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையதாக தமிழகத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.

மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்கிற்கும் இந்த போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீசும் அனுப்பப்பட்டது.
தொடர்ந்து தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், ஜாபர் சாதிக் ராஜஸ்தானில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருந்த ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து பேசிய போலீஸ் அதிகாரிகள், போதைப்பொருள் கடத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பிடிக்க முழுவீச்சில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 3500 கோடி ரூபாய் போதைப்பொருளை ஜாபர் சாதிக் கடத்தியுள்ளார். உணவுப்பொருள் என்ற பெயரில் ஆஸ்திரேலியா, மலேசியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு ஜாபர் சாதிக் போதைப்பொருளை கடத்தியுள்ளார். போதைப்பொருள் கடத்தல் மூலமாக பெறப்பட்ட பணத்தை சினிமா மற்றும் கட்டுமானத்தில் முதலீடு செய்து இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
ராஜஸ்தானில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தொடர்புடைய ஒருவரையும் விடக்கூடாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:- சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனான திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கை, தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையம் இன்று கைது செய்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில், பல திமுக தலைவர்களுடன் ஜாபர் சாதிக் நெருக்கமாக இருந்த நிலையில், பணமோசடி செய்ய, ஜாபர் சாதிக் எவ்வாறு அவர்களுக்கு உதவியாகச் செயல்பட்டார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். விசாரணை அதிகாரிகள், முழுமையான விசாரணை மேற்கொண்டு, ஜாபர் சாதிக் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் திமுக ஆட்சியில் மிக எளிதாகப் பரவியிருக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தடைசெய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு தமிழ்நாடு பாஜக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் அதில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications