4+1 ராஜ்யசபா சீட் கொடுக்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி.. கறார் காட்டும் பிரேமலதா.. காரணம் இதுதான்
சென்னை: லோக்சபா தேர்தலில் 1 ராஜ்யசபா சீட் உறுதியாக கொடுப்பதாக கூறும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என தேமுதிக உறுதியாக தெரிவித்துள்ளதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தமிழ்நாட்டில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் வியூகம் வகுத்து வருகிறது திமுக. கடந்த லோக்சபா தேர்தலில் திமுக அணியில் இருந்த காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள், வி.சி.க., ஐ.யூ.எம்.எல். உள்ளிட்ட கட்சிகளே தற்போதும் தொடர்வதால் இப்போது வரைக்கும் சிக்கல் இல்லை. இட ஒதுக்கீடு, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில்தான் சிக்கல் உருவாக வாய்ப்புள்ளது.

அதிமுகவைப் பொறுத்தமட்டில், பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்பதைத் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். மற்ற கட்சிகளுடன் பேச்சு மறைமுகமாக நடைபெறுகிறது. ஆனால், இதுவரை உறுதியான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. குறிப்பாக, பாட்டாளி மக்கள் கட்சியுடன் உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கலாம்.
தேமுதிக உடனும் அதிமுக தலைவர்கள் பேசி வருகின்றனர். அதே நேரத்தில் பாஜக கூட்டணி சேர்வதில்தான் பிரேமலதா விரும்புவதாக அக்கட்சியின் தலைமையக வட்டாரங்களில் பேசப்படுகிறது. நாளைய தினம் 7ஆம் தேதி நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உறுதியான முடிவை எடுக்க தேமுதிக திட்டமிட்டுள்ளது. 5 லோக்சபா தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா இடம் ஆகியவற்றை தரும் கட்சியுடன்தான் கூட்டணி என்பதில் பிரேமலதா உறுதியாக இருக்கிறாராம். அதனை நாளைய தினம் வெளிப்படையாகவே அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
இதனிடையே பாஜக கூட்டணியில் தேமுதிகவை இழுக்க பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டதாகவே தெரிகிறது. விஜயகாந்த் ரசிகர்கள், தேமுதிக தொண்டர்களின் வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் வாங்கிவிட வேண்டும் என்பதில் தேமுதிக உறுதியாக உள்ளது. எனவே பிரேமலதா எதிர்பார்க்கும் 5 அல்லது 4 லோக்சபா தொகுதிகளை கொடுப்பதில் பாஜகவிற்கு சிக்கல் இருக்காது. அதே நேரத்தில் 1 ராஜ்யசபா சீட் கொடுப்பதில்தான் சிக்கல் நீடிக்கிறது.
அதே போல 1 ராஜ்யசபா சீட் விசயத்தில் தேமுதிக சமரசம் செய்துக்கொள்ளாது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. விஜயகாந்த் மறைவுக்குப்பிறகு மக்களின் அனுதாப அலை, கூட்டணிக்குப் பெரும்பலமாக இருக்கும் என நம்புகிறாராம். ஆனால், 5+1 பார்முலாவிற்கு, கூட்டணி தலைமை அதிக அழுத்தம் கொடுத்தால், 4+1 என்ற உடன்பாட்டிற்கு இறங்கிவரலாம். அதே நேரத்தில் ராஜ்யசபா சீட் தரும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கிறாராம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா.
ராஜ்யசபா சீட் விசயத்தில் இப்படி கறார் காட்டுவதற்குக் காரணம் பிரேமலதாவை ராஜ்யசபா எம்பியாக்க வேண்டும் என அக் கட்சியின் பெரும்பாலோர் விரும்புவதாகவும் அக் கட்சியின் தலைமையகத்தில் பேச்சு அடிபடுகிறது. எனவேதான், 5+1 என்ற ஃபார்முலாவில் உறுதியாக இருக்கிறார்களாம்.
கூட்டணிக்கு தலைமையேற்கும் கட்சி, அதிக அழுத்தம் கொடுத்தால், ஒரு லோக்சபா தொகுதியைக் குறைத்துக் கொண்டு, 4+1 ஃபார்முலாவுக்கு ஒப்புக் கொள்வார்கள் என தேமுதிக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேமலதாவின் கண்டிசனுக்கு ஓகே சொல்லும் பட்சத்தில் பாஜக-தேமுதிக கூட்டணி விரைவில் உறுதிப்படும் என தேமுதிக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications