பல்லடம் பிரதமர் மோடி கூட்டத்தில் "சர்ப்ரைஸ்?" பாஜக நிர்வாகிகள் உடன் "அந்த" 3 தலைகள்! அடடே
சென்னை: பிரதமர் மோடி இன்று திருப்பூரில் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிலையில், இதில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்த கொள்ள வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
விரைவில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பாஜக கூட்டணியை இறுதி செய்ய பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி முறிந்துவிட்ட நிலையில், பாஜக தனது தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறது. இதற்கிடையே பாஜக கூட்டணி தொடர்பாக இன்று முக்கிய சம்பவம் நடக்கப் போகிறது.
பாத யாத்திரை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பாஜகவை வளர்க்க"என் மண் என் மக்கள்" என்ற யாத்திரையை நடத்தி வருகிறார். இதைக் கடந்தாண்டு ஜூலை மாதம் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இந்த பாத யாத்திரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அண்ணாமலையின் இந்த பாத யாத்திரையில் பல்வேறு பாஜக தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த பாத யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி இன்று திருப்பூரில் நடக்கிறது. ஏற்கனவே திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தொகுதிகளில் பாத யாத்திரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அண்ணாமலை இன்று காலை அந்த இரு தொகுதிகளிலும் பாத யாத்திரை செல்கிறார். அதைத் தொடர்ந்து பல்லடத்தை அடுத்த மாதப்பூரில் நடக்கும் நிறைவு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். இந்த நிறைவு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
பிரதமர் மோடி: இதற்காகத் திருப்பூர், கோவை மாவட்டங்களில் போலீசார் பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல்லடத்தில் ஹெலிபேட்டில் தரையிறங்கும் பிரதமர் மோடி மாநாட்டுத் திடல் வரை சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு சாலை மார்க்கமாகச் செல்கிறார். மேலும், இந்த பொதுக்கூட்டத்திற்காக மாதப்பூரில் பிரம்மாண்ட மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சிகளைக் காட்டிலும் இது பிரம்மாண்டமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
கூட்டணிக் கட்சித் தலைவர்கள்: இந்த நிகழ்ச்சியில் தான் கூட்டணிக்கான முக்கிய சம்பவங்களையும் பாஜக செய்ய உள்ளது. தற்போது வரை பாஜக கூட்டணியைப் பொறுத்தவரைத் தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே மற்றும் புதிய நீதிக் கட்சி ஆகியவை பாஜக உடனான கூட்டணியை உறுதி செய்துள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு பெரம்பலூர் தொகுதியில் வெற்றிபெற்ற பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி இம்முறை பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அவர் அதே பெரம்பலூரில் களமிறங்கலாம் எனக் கூறப்படுகிறது.
அதேபோல புதிய நீதிக் கட்சியும் பாஜக உடனான கூட்டணியை இறுதி செய்துள்ளது. இந்த முறை புதிய நீதிக் கட்சி பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் நேற்றைய தினம் தான் கூட்டணியை உறுதி செய்தது. மூன்று கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில், அக்கட்சித் தலைவர்கள் இன்று பல்லடத்தில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
சப்ரைஸ்: அதேநேரம் இதைத் தாண்டியும் சில சப்ரைஸ் பல்லடம் பொதுக்கூட்டத்தில் நடக்கலாம் எனக் கூறப்படுகிறது. மாற்றுக் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் பாஜகவில் இணையலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications