வீடு, மனை, அடுக்குமாடி குடியிருப்புகள்.. ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரையபத்திரம்: சென்னை கலெக்டர்
சென்னை: சென்னை அண்ணாநகர் கோட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கீடுதாரர்கள் முழுத்தொகை செலுத்தியிருந்தால் கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், அண்ணாநகர் கோட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் ஒதுக்கீட்டிற்கு முழுத்தொகையினையும் செலுத்தியிருந்தால் அதற்குண்டான ஆவணங்கள் அண்ணாநகர் கோட்டத்தில் சமர்ப்பித்து கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புர ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது.
இதனிடையே நகர்ப்புர ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வீட்டுவசதி வாய்ப்புகள் மட்டுமே போதுமானதாக இருக்காது, அவர்களுக்கு குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை, பொது வெளியிடம் போன்ற போதுமான நகர்ப்புற வசதிகளுடன் வீட்டுவசதி ஏற்படுத்துவது அவசியம் என்று கருதி தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரினை தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது,
குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல, குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ராயபுரம் சட்டமன்ற தொகுதி மூலக்கொத்தளம் திட்டப்பகுதியில் ரூ.122.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1044 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு இடங்களில் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.
இப்படி கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு குடியிருப்புகளும் 409 ச.அடி பரப்பளவு உள்ளது. இத்திட்டப்பகுதியில் குடிநீர், மற்றும் கழிவு நீர் இணைப்புகள் மின்தூக்கி வசதி, மின்னாக்கி, தீ அணைக்கும் கருவி ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை அண்ணாநகர் கோட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கீடுதாரர்கள் முழுத்தொகை செலுத்தியிருந்தால் கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications