கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா?
சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்களும், கட்சிக்குள் அதிருப்திகளும் தொடர்ச்சியாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் புதிய பரபரப்பு உருவாகியுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் நிலையில், ஆளூர் ஷாநவாஸ் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து சுமார் 40 நிமிடங்கள் வரை தொடர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஆளூர் ஷாநாவாஸுக்கு தவெக மூலம் ராஜ்யசபா சீட் பெற்றுத் தந்து சமாதானம் செய்யும் முயற்சியில் திருமாவளவன் ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே ஆளூர் ஷாநவாஸுக்கு சீட் வழங்கப்படாதது விசிகவுக்குள் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. கட்சியில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

அந்த சூழலில், அவருக்கு விசிக முதன்மை செயலாளர் பொறுப்பு வழங்கி திருமாவளவன் சமாதானம் செய்ய முயன்றதாக கூறப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமைச்சரவையில் விசிக பங்கேற்றதிலும் ஆளூர் ஷாநவாஸ் வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார்.
விசிக
இந்த நிலையில், "ஆளூர் ஷாநவாஸ் திமுகவில் இணையப் போகிறார்" என்ற தகவல்கள் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இதற்கு காரணமாக, திமுக தலைவரும் முன்னாள்முதலமைச்சருமான முக ஸ்டாலின் மற்றும் ஆளூர் ஷாநவாஸ் இடையே நடந்ததாக கூறப்படும் ரகசிய சந்திப்பு பேசப்படுகிறது. இதுதொடர்பாக திமுக வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, மே 21ஆம் தேதி இரவு சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.
ஆளூர் ஷாநவாஸ்
அப்போது, தவெக அரசுக்கு விசிக ஆதரவு அளித்ததும், அமைச்சரவையில் இணைந்ததும் குறித்து தனக்கு முழுமையான சம்மதம் இல்லை என்று ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, "திமுகவில் இணைய தயாராக இருக்கிறேன்" என்ற மனநிலையையும் அவர் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு ஸ்டாலின் உடனடியாக எந்த முடிவும் எடுக்காமல், "இப்போதைக்கு பொறுமையாக இருங்கள்" என்று அறிவுரை கூறியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
விசிக - தவெக
இதற்கிடையில், ஆளூர் ஷாநவாஸ் பெயரில் சமூக வலைதளங்களில் வெளியான பதிவுகள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் அவை அவருடைய அதிகாரப்பூர்வ பதிவுகள் அல்ல என்று விசிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆளூர் ஷாநவாஸ் நேரடியாக எந்த மறுப்பும் தெரிவிக்காததால் சந்தேகங்கள் நீடித்துக் கொண்டே இருக்கின்றன. மற்றொரு பக்கம், விசிக - தவெக இடையேயான அமைச்சரவை பேச்சுவார்த்தைகளில் சில முக்கிய அரசியல் கோரிக்கைகள் வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜ்ய சபா
அதன்படி, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு வாரிய தலைவர் பதவிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கோரப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஆளூர் ஷாநவாஸுக்காகவே பேசப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பரபரப்புக்கு நடுவே, முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு விசிகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது கட்சிக்குள் நிலவும் அதிருப்தியை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
திருமாவளவன்
திருமாவளவன் தலைமையை விமர்சித்தபடியே அவர் விலகியிருப்பதும் கவனிக்கப்படுகிறது. இதனால், "விசிகவில் மேலும் சில முக்கிய நிர்வாகிகள் மாற்று அரசியல் முடிவுகளை எடுக்கிறார்களா?", "ஆளூர் ஷாநவாஸ் அடுத்த கட்டமாக என்ன முடிவு எடுக்கப் போகிறார்?" என்ற கேள்விகள் தற்போது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications