இதே திமுகவாக இருந்தா? ஆளுநர் அர்லேகரை எதிர்க்கும் துணிவு விஜய்யிடம் உள்ளதா? VCK ஆளூர் ஷாநவாஸ் கேள்வி
சென்னை: தவெக 108 இடங்களை பெற்றும் ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் இடையூறு செய்கிறார். அவரை எதிர்க்கும் துணிவு விஜய்யிடம் இருக்கிறதா என முன்னாள் எம்எல்ஏவும் விசிக நிர்வாகியுமான ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக.

இதுவே 108 எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது RN ரவிக்கு நடந்தது போல் நடந்திருக்கும். ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது உள்ளதா விஜயிடம்? இவ்வாறு தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
112 பேரின் ஆதரவுக் கடிதம் கொடுக்கப்பட்ட நிலையில் 118 பேரின் கடிதங்களை விஜய்யிடம், ஆளுநர் கேட்டதாக சொல்லப்படுகிறது. 118 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்றால் மட்டுமே விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என சொல்லப்படுகிறது. மேலும் ஆட்சி அமைத்தால் கவிழாது என உறுதியளிக்க முடியுமா என ஆளுநர் கேட்டதாக சொல்லப்படுகிறது.
112 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநர் அர்லேகரை நேற்று தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க 2 வாரம் கால அவகாசம் கொடுக்குமாறும் விஜய் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் ஆளுநரோ 2 நாட்கள்தான் தரப்படும் என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே சென்னை நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் ஆட்சி அமைக்க ஆளுநர், விஜய்யை அழைக்காததால் அந்த ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டன.
நேற்று இரவு விஜய், தனது சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக ஆளுநர் அர்லேகரை சந்தித்த விஜய் இன்று ராஜ்பவன் சென்றார்.
அப்போது விஜய்க்கு போதுமான பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என கூறிவிட்டாராம். இதனால் பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் கட்சி நிர்வாகிகளுடன் தவெக விஜய் ஆலோசனை நடத்தினாராம்.

இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு தவெக இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் நேரில் வந்து ஆதரவு கோரியுள்ளார். அது போல் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கும் அவர் செல்கிறார். மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனையும் தவெக நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு கோரவுள்ளனர். மேலும் ஆளுநர் ஆட்சி அமைக்க விஜய்யை அழைக்க வேண்டும் என திருமாவளவனும் கூறி வரும் நிலையில் ஆளூர் ஷாநவாஸ் இப்படி கருத்தை விஜய்க்கு எதிராக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை எம்எல்ஏவாக இருந்தவர் ஆளூர் ஷாநவாஸ். விவாதங்களில் திமுகவுக்கு ஆதரவான கருத்துகளை பேசி வந்தார். இந்த சட்டசபை தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதி தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தார், ஆனால் அவருக்கு போட்டியிட வாய்ப்பை திருமாவளவன் கொடுக்கவில்லை.












Click it and Unblock the Notifications