தொட்டீங்க 10 வருஷம் ஜெயில்.. ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது கை வைத்தால் சட்ட நடவடிக்கை: மா.சுப்பிரமணியம்
சென்னை: உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் மற்றும் அதன் டிரைவர்கள்-பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் எச்சரித்துள்ளார். ஏற்கனவே உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் மற்றும் அதன் டிரைவர்கள்-பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்திட தமிழக அரசை தூண்டிவிட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு இருக்கிறார். திருச்சி துறையூரில் நடந்த டிரைவர் மற்றும் பெண் ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார்கள் கூறப்பட்டது.

தமிழக அரசு நடவடிக்கை
இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் நடந்து வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, "எங்கேயாவது விபத்து ஏற்பட்டால் 8 முதல் 10 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் விரைந்து சென்று உயிர்களை காக்க வேண்டும்.
எடப்பாடி எங்கு சென்றாலும் அங்கு ஆம்புலன்ஸ் வருவதாக சொல்றாங்க. அவர் பெரும்பகுதி ஆதரவு திரட்டுவதற்கு பிரதான சாலையில்தான் செல்கிறார். இவர் ஆம்புலன்ஸ் வரும் வழியில் கூட்டத்தை கூட்டி நான் வரும் வழியில் ஆம்புலன்ஸ் விடுவதாக சொல்லி இருக்கிறார்.
அரண்டவன் கண்ணுக்கு
தமிழில் இதற்கு பழமொழி உண்டு, "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்றெல்லாம் சொல்வார்கள். இந்த ஆம்புலன்ஸ் பார்க்கும்போது அவருக்கு வேறு ஏதோ ஞாபகம் வருகிறது என்று நினைக்கின்றேன். இது தவறான விஷயம். அதுவும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பெயரை நோட் பண்ணு என்றெல்லாம் சொல்கிறார். இது மருத்துவத்துறையில் பணிபுரியும் மருத்துவப் பணியாளர்களை மிரட்டும் தொனி.
ஒரு முன்னாள் முதல்வர், மிரட்டுகின்ற தொனியில் பேசுவது என்பது அநாகரிகமான செயல். அவர் இத்துடன் இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
சட்ட நடவடிக்கை பாயும்
மேலும், இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்லும்போது, "தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் 1,330 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இதன் மூலம் நாள்தோறும் நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.
சாலைகளில் ஆம்புலன்ஸ்கள் வந்தால் வழிவிட்டு விலகுவது தான் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் மரபாகும். ஆனால் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, இதுகுறித்து கூட தெரியவில்லை.
அவர் சாலையில் நின்று பேசும்போது வந்த ஆம்புலன்ஸ் டிரைவரிடம், "இனி நான் பேசும்போது ஆம்புலன்ஸ் வந்தால் அதில் உள்ள டிரைவர் அதே ஆம்புலன்சில் நோயாளியாக செல்வார்'' என்று மிரட்டியிருக்கிறார்.
உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்களை இது போல மிரட்டலாமா? திருச்சி துறையூரிலும், ஆம்புலன்ஸ் மீதும், அதில் இருந்த டிரைவர் மற்றும் பெண் ஊழியர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் மற்றும் அதன் டிரைவர்கள்-பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்திட தமிழக அரசை தூண்டிவிட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறேன் என்று எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications