ஆம்பூர் கலவர வழக்கில் நாளை தீர்ப்பு.. வேலூர், திருப்பத்தூரில் பதற்றம்! 1,200 போலீசார் குவிப்பு!
சென்னை: ஆம்பூர் கலவர வழக்கில் நாளை (ஆகஸ்ட் 28) அறிவிக்கப்படும் என தள்ளிவைக்கப்பட்டது. இந்த தீர்ப்பையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
வேலுார் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் பழனி. இவர் மனைவி பவித்ரா (25). கடந்த 2015 ஆம் ஆண்டு மே, 24 ஆம் தேதி மாயமானார். அவரை மீட்டு தரக் கோரி பழனி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். பள்ளிகொண்டா போலீசார், ஆம்பூரை சேர்ந்த ஷமீல் அகமது (26) என்பவரிடம், 2015 ஜூன் 15 ஆம் தேதி விசாரணை நடத்தினர்.

பள்ளிகொண்டார் காவல் ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ், ஷமீல் அகமதுவை அங்குள்ள காவலர் குடியிருப்பு ஒன்றில் அடைத்து வைத்து விசாரித்தார். அப்போது அவர் கடுமையாகத் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் போலீசார் அவரை அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ஷமீல் அகமது உடல்நிலை பாதித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, ஆம்பூர் டவுன் காவல் நிலையத்தை, 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜ் உட்பட, 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விசாரணை அறிக்கை அதிருப்தி அளிப்பதாக, மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்தது.
கடந்த, 2015- ஜூன் 27 ஆம் தேதி இரவு 7 மணியளவில் ஆம்பூரில், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், 500-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு, போலீசாரை கைது செய்யக்கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த பேருந்துகள், லாரிகள், கார்கள் மற்றும் வாகனங்கள் மீது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
கற்கள் வீசப்பட்டதால் பல வாகனங்கள் சேதமடைந்தன. பேருந்தில் இருந்த பயணிகள் பலர் காயமடைந்தனர். லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு ஓட்டுநர்கள் தாக்கப்பட்டதால் போராட்டம் கலவரமாக மாறியது. சுமார் 5 மணி நேரம் இந்தக் கலவரம் நடந்தது. கலவரத்தில் தொடர்புடைய 190-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. கைதான 118 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பு திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் திருப்பத்துார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் முன், திருப்பத்துார் எஸ்.பி சியாமளாதேவி, வேலுார் எஸ்.பி மயில்வாகனன் தலைமையில், 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளிலும் நேற்று காலை முதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஆனால் தீர்ப்பை நாளை (28 ஆம் தேதி) ஒத்தி வைப்பதாக நீதிபதி மீனாகுமாரி அறிவித்தார். ஆம்பூர் கலவர வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இதையடுத்து ஆம்பூரில் பதற்றமான சூழல் காரணமாக போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications