அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!
சென்னை: அரசியல் களத்தில் திமுகவுக்கும், தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி்க் கழகத்திற்கும் இடையே கடுமையான அரசியல் ரீதியிலான மோதல்கள் நிலவி வரும் வேளையில், ஒரு முக்கிய அரசியல் நாகரிக நிகழ்வு இன்று அரங்கேறியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திராவிட இயக்கத்தின் மூத்த தலைவருமான கலைஞர் மு. கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் அவருக்குத் எக்ஸ் தளம் வழியாக நெகிழ்ச்சியான முறையில் மரியாதை செலுத்தியுள்ளார்.

ஆயிரம் அரசியலில் விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ்நாட்டின் ஆளுமைகளாகத் திகழ்ந்த முன்னோடிகளை மதிப்பதே உண்மையான அரசியல் பண்பு என்பதை உணர்த்தும் வகையில் முதலமைச்சர் விஜய் இன்று கலைஞர் கருணாநிதி பிறந்தநாளன்று வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
"முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூர்கிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்." என முதல்வர் ஜோசப் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

விஜய் அரசியல் கட்சி தொடங்கி, தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகும், திமுகவின் குடும்ப அரசியல் மற்றும் நிர்வாகக் குறைபாடுகளைத் தனது பேச்சிலும், அறிக்கைகளிலும் நேரடியாக விமர்சித்து வருகிறார்.
திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கச் சென்றபோதும் திமுகவையும், அதன் தலைவர் ஸ்டாலினையும் கடுமையாகச் சாடினார் முதலமைச்சர் விஜய். இப்படிப்பட்ட சூழலில், கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் ஜோசப் விஜய். முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின், விஜய்யை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.
திமுக மற்றும் தவெக தொண்டர்களுக்கு இடையே சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் அனல் பறந்தாலும், தலைவர்களின் இத்தகைய நாகரிகப் போக்கு, தமிழக அரசியலில் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தைக் கொண்டு வரும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications