தமிழகத்தில் பல புதிய கட்டுப்பாடுகள்.. மளிகை கடைகள் பகல் 12 மணி வரை மட்டும் இயங்கலாம்.. முழு விவரம்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு மேலும், சில புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது,
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 20,935 பேருக்கு கொரோனா செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஒரே நாளில் மாநிலத்தில் 122 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா பரவல் 10% வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மாநில அரசு பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
மாநிலத்தில் எடுக்க வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன? மூத்த அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை
புதிய கட்டுப்பாடுகள்
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக வரும் இந்தக் கட்டுப்பாடுகள் வரும் மே 6ஆம் தேதி காலை 4.00 மணி முதல் 20.05.2021 காலை 4.00 மணி வரை தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்திற்குக் கட்டுப்பாடு
அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மெட்ரோ ரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பொது மக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.
காய்கறி கடைகளுக்குக் கட்டுப்பாடு
தனியாகச் செயல்படும் மளிகை. பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமல் நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. வணிக வளாகங்களுக்கு ஏப்ரல் 26 முதல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் இயக்க தடை விதிக்கப்படுகிறது.
50% வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி
இந்தக் கடைகளிலும், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மேற்கூறிய மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறிக் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்தத் தடையுமின்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
தேநீர் கடைகளுக்குக் கட்டுப்பாடு
அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை (Take away service) வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை பட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் தேநீர்க்கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.
அழகு நிலையங்களுக்குத் தடை
உள் அரங்குகள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு உள்ளிட்ட விழாக்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், திரையரங்குகளும் செயல்படாது. ஏற்கனவே, மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள், (Spas) இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும், அழகு நிலையங்கள், (Spas) இயங்க தடை விதிக்கப்படுகிறது.
இறப்பு சார்ந்த நிகழ்வுகள்
ஏற்கனவே, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், 25 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை. அதேநேரம் மருந்தங்கள், பால் விநியோகத்திற்குக் கட்டுப்பாடுகள் இல்லை. மேலும், பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.. சனி, ஞாயிறுகளில் மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்பட தடை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.