அங்கிட்டு ஜேபி நட்டா.. இங்கிட்டு அமித்ஷா.. திமுகவுக்கு எதிராக காய் நகர்த்தல்?.. பரபரக்கும் அரசியல்
சென்னை: தமிழக அரசியல் விவகாரம் குறித்து தேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டாவும் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து நேரில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் டெல்லி சென்றிருந்தனர்.
இவர்கள் 15 ஆம் தேதி ஆய்வு நடத்தி நேற்று முன் தினம் அதாவது 21 ஆம் தேதி தேசிய பாஜக தலைவர் ஜே பி நட்டாவை நேரில் சந்தித்து அறிக்கையை சமர்ப்பித்தனர். அப்போது வானதியிடமும் குஷ்புவிடமும் தமிழக அரசியல் குறித்து நட்டா விசாரித்ததாக தெரிகிறது.

அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும்
அவர்களிடம் நட்டா, "அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும் இளையராஜா ஒப்பிட்டு முன்னுரை எழுதியிருந்த விவகாரம், இதனால் தமிழகத்தில் எந்தளவுக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது, அதிமுகவின் செயல்பாடுகள் சட்டசபையிலும் இளையராஜா கருத்திலும் எப்படியிருக்கிறது, திமுகவின் அரசியல் எப்படியிருக்கிறது" உள்ளிட்ட முக்கிய கேள்விகளை முன் வைத்ததாக தெரிகிறது.

2024 ஆம் ஆண்டு தேர்தல்
அதற்கு வானதியும் குஷ்புவும், பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநருக்கு எதிராக மாநில அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் ஆளுநர் கான்வாய் மீது கல்வீச்சு, 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவை தோற்கடித்து மத்தியில் ஆட்சியை பிடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து திட்டம் தீட்டுவது, குடியரசுத் தலைவர் தேர்தலில் கூட பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரு வேட்பாளரை நிறுத்த யூகித்திருப்பது உள்ளிட்ட விவகாரங்களை சொல்லியுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்
மேலும் 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜகவிலிருந்து ஒரு எம்பி கூட தேர்வு செய்யப்படாத நிலையில் அதே பாணியை வைத்து 2024 ஆம் ஆண்டும் பாஜகவை தோற்கடிக்க திமுக வியூகம் வகுத்து வருவது, ரூ 1000 உரிமை தொகை கொடுப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேட்டால் மத்திய அரசிடம் இருந்து ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, வெள்ள நிவாரணத்தை வாங்கி வாருங்கள் என கூறி மத்திய அரசு மீது பழி போடுவது குறித்தும் தெரிவித்தனராம்.

பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை திமுகவினர் கடுமையாக விமர்சிப்பது, துபாய் பயணத்தின் போது முதல்வர் ஸ்டாலினை பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்ததால் அவர் மீது ரூ 100 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு போட்டது, அவ்வப்போது பாஜக நிர்வாகிகள் முதல்வருக்கு எதிராக கருத்து சொல்வதாக கூறி கைது செய்யப்படுகிறார்கள். இதே பிரதமருக்கு எதிராகவோ மத்திய அரசுக்கு எதிராகவோ எத்தனை மோசமாக மற்றவர்கள் விமர்சித்தாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை உள்ளிட்டவை குறித்தெல்லாம் நட்டாவிடம் வானதியும் குஷ்புவும் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

பக்கா வியூகம்
இவற்றை எல்லாம் கேட்ட நட்டா, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை வெல்ல வியூகம் வகுப்போம். அது போல் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்க உழைப்போம். இதற்காக இப்போதே தொண்டர்களை உழைக்க சொல்லுங்கள். பிரதமர் மோடியின் திட்டங்களை வீடு வீடாக கொண்டு செல்லும் முயற்சியை மேற்கொள்ள சொல்லுமாறும் நட்டா தெரிவித்ததாக தெரிகிறது.

சென்னையில் அமித்ஷா
அது போல் புதுவையில் இன்று பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு நேற்றைய தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா வந்திருந்தார். அவரை வரவேற்க சென்ற பாஜக நிர்வாகிகள் சிலரிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு சாதகமான சூழலை உருவாக்குவது குறித்தும் கேட்டறிந்தார். மேலும் திமுகவை சமாளிப்பது குறித்தும் அமித்ஷா பாஜக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கியிருக்க வாய்ப்பிருப்பதாகவே சொல்லப்படுகிறது. இரு தினங்கள் தமிழகத்தில் அமித்ஷா இருந்ததால் பல விஷயங்களை அவர் நேரடியாகவும் பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது. தமிழக நிலவரம் குறித்து டெல்லியில் வானதி, குஷ்புவிடம் ஜேபி நட்டாவும் சென்னையில் அமித்ஷாவும் நேரடியாக கேட்டறிந்துள்ளனர். இவர்களுக்கு கிடைத்த தகவல்களை வைத்து இருவரும் டெல்லியில் திமுகவுக்கு எதிராக காய் நகர்த்துவது குறித்தும் வெற்றி வியூகம் குறித்தும் ஆலோசனை நடத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒரு வியூகம் நடத்தி வருகின்றனர். எனவே இவர்களது வியூகங்களில் எது கைகொடுக்கும் என்பது தேர்தல் முடிவுகளின் போதுதான் தெரியவரும்.












Click it and Unblock the Notifications