நாறப்போகுது சென்னை.. நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மாநகராட்சியால் பாதிக்கப்படும் பணிகள்!
சென்னை: சென்னை மாநகராட்சி தற்போது கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இதனால் சென்னை மாநகராட்சி பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய சுமார் 1,800 கோடி ரூபாய் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதுதொடரும் பட்சத்தில் தூய்மை பணி உள்பட பல்வேறு பணிகள் பாதிக்கப்படும் என்பதால் சென்னையை துர்நாற்றம் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் சில நாட்களுக்கு முன்பு வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அதில் தமிழ்நாட்டின் மொத்த கடன் ரூ.10 லட்சம் கோடியாக உள்ளது. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் பொறுப்புகளை சேர்த்தால் தமிழ்நாட்டின் மொத்த கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடியாக இருக்கிறது என்று கூறினார்.

அதேபோல் 2021-26 வரை 5 ஆண்டு காலக்கட்டத்தில் (திமுக அரசில் முதல்வராக முக ஸ்டாலின் இருந்த காலம்)ரூ.4.87 லட்சம் கோடி கடன் பெறப்பட்டு நிலுவையில் உள்ளதாக வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கடன் அளவு என்பது தவெக தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தான் சென்னை மாநகராட்சி தற்போது கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் மாநகராட்சி பணிகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் விடுவிக்க முடியாத நிலை உள்ளது. தற்போது வரை சுமார் ரூ.1,800 கோடி வரை ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது.
இதுபற்றி மாநகராட்சியின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''இந்த நிலுவைத் தொகையை படிப்படியாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலுவைத் தொகையில் புதிய திட்ட பணிகளுக்கான நிதி மட்டுமின்றி, பல்வேறு ஒப்பந்தங்கள், தினசரி பராமரிப்பு மற்றும் இயக்க பணிகளுக்கான தொகைகளும் அடங்கும்.
தூய்மை பணியாளர்களுக்கான ஒப்பந்தங்களுக்கு மட்டுமே சென்னை மாநகராட்சி ஒவ்வொரு மாதமும் சுமார் 50 கோடியில் இருந்து 60 கோடி ரூபாய் வரை செலுத்த வேண்டியுள்ளது. இது தவிர, 'அவுட்சோர்ஸிங்' பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கான தொகையும் நிலுவையில் உள்ளது.
பணம் செலுத்துவதற்கான கால அட்டவணைகளை உருவாக்குதல் மற்றும் 'RXIL' தளம் மூலம் இன்வாய்ஸ் தள்ளுபடி வழிமுறைகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகளை நாங்கள் ஏற்கனவே மேற்கொண்டு வருகிறோம். அதோடு, சொத்துவரி உள்ளிட்ட மாநகராட்சியின் சொந்த வருவாய் ஆதாரங்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இதன் மூலம் நிலுவைகளை படிப்படியாக குறைக்க முடியும்'' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சென்னை மாநகராட்சி பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் கவலையில் உள்ளனர். வட்டிக்கு வாங்கி ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளுகிறோம். ஆனால் மாநகராட்சி சார்பில் பணம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதால் எங்களுக்கு கூடுதல் வட்டி சுமை ஏற்படுகிறது. இதனால் எங்களுக்கு 6 முதல் 7 சதவீதம் வரை தவிர்க்க முடியாத இழப்பு ஏற்படுகிறது என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் தலைவர் ஆர் ராமராவ் கூறுகையில், ''மாநகராட்சி எனக்கு மட்டும் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சுமார் 14 கோடி ரூபாய் நிலுவை தொகை வழங்க வேண்டியுள்ளது. ஒரு பில் சமர்ப்பிக்கப்பட்டவுடன், அது வார்டு மற்றும் மண்டல அளவிலான பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர் மற்றும் நிதிப் பிரிவுகள் எனப் பல கட்ட ஆய்வுகளைக் கடந்து, இறுதியாக மத்திய நிதி பிரிவுக்கு செல்ல வேண்டும். இந்த முழு நடைமுறைக்கும் சுமார் ஒன்றரை மாதங்கள் ஆகும். பில் அங்கீகரிக்கப்பட்ட பிறகும், போதிய நிதி இல்லாததால் பணம் விடுவிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது.
பல மாதங்களாகப் பணம் செலுத்தப்படாமல் தாமதமாகும் போது, நாங்கள் இந்த கடன்களுக்கான வட்டியை தொடர்ந்து செலுத்த வேண்டியுள்ளது. இது எங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. மாநகராட்சி அவ்வப்போது சிறிய தொகைகளை விடுவித்தாலும், புதிய பணிகள் தொடங்கப்படும்போது நிலுவை தொகை மீண்டும் அதிகரித்து கொண்டே போகிறது'' என்றார். இதனால் சென்னை மாநகராட்சி உடனடியாக நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஒருவேளை ஒப்பந்ததாரர்களுக்கு பணம் விடுவிக்கப்படாவிட்டால் அவர்கள் மேற்கொள்ளும் பணியில் தாமதம் ஏற்படும். இது சென்னையில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் நிதி நெருக்கடியால் தூய்மை பணியாளர்களுக்கான சம்பளம் வழங்குவதில் தற்போது வரை பிரச்சனை இல்லை. ஒருவேளை நிதி நெருக்கடி மோசமாகி தூய்மை பணியாளர்களுக்கான சம்பளம் வழங்கப்படாவிட்டால் மொத்த சென்னையிலும் தூய்மை பணிகள் பாதிக்கும். இதனால் சென்னையே துர்நாற்றத்தை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications