அமித்ஷாவுக்கு வரலாறும் தெரியவில்லை.. அரசியலும் தெரியவில்லை.. சூடாக பதிலடி கொடுத்த திமுக
சென்னை: முதல் முறையாக காமராஜர் முதல்வராக ஆவதற்கு பெரியாரும் அண்ணாவும் ஆதரவு அளித்தார்கள் என்பதுதான் வரலாறு. அது கூட அமித்ஷாவுக்கு தெரியவில்லை. அவர் வட நாட்டுக்காரர். அவருக்கு அரசியல் தெரியாது. என்று திமுகவின் கான்ஸ்டைன் ரவீந்திரன் பேசியுள்ளார்.
தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, இன்று கோவிலம்பாக்கத்தில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாஜக நிர்வாகிகளை அமித்ஷா சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வெற்றி பெற வேண்டும்.

வரும் காலத்தில் ஒரு தமிழனையாவது பிரதமராக்க வேண்டும். இருமுறை பிரதமர் வேட்பாளரை இழந்ததற்கு திமுகதான் காரணம்" என்று பேசினார். அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு திமுக காட்டமாக பதில் அளித்துள்ளது. தனியார் செய்தி தொலைக்காட்சில் பேசிய திமுகவின் கான்ஸ்டைன் ரவீந்திரன் இது குறித்து கூறியதாவது:-
அமித்ஷாவுக்கு அரசியல் தெரியாது என்பதை ஒத்துக்கொண்டு இருக்கிறார். காமராஜர் பிரதமர் ஆக வேண்டும் என்று அவருக்கான சூழல் வரும் போது வேண்டாம் என்று மருத்து நான் கிங்மேக்கராக இருந்து கொள்கிறேன் என்று சொன்னவர் காமராஜர். அவருக்கு திமுக எதிர்க்கவோ தோற்கடிக்கவோ இல்லை. இன்னும் சொல்லப்போனால் முதல் முறையாக காமராஜர் முதல்வராக ஆவதற்கு பெரியாரும் அண்ணாவும் ஆதரவு அளித்தார்கள் என்பதுதான் வரலாறு.
அது கூட அமித்ஷாவுக்கு தெரியவில்லை. அவர் வட நாட்டுக்காரர். அவருக்கு அரசியல் தெரியாது. அடுத்து மூப்பனாரை பற்றி சொல்கிறார். மூப்பனார் இது குறித்து தெளிவாக சொல்லியிருக்கிறார். நான் எங்கேயாவது பிரதமர் ஆக வேண்டுமா என்று நான் சொன்னேனா என அவரது கட்சி நிர்வாகிகள் கேட்ட போதே சொல்லியிருக்கிறார்.
வேட்டி கட்டிய இரண்டு தமிழர்கள் டெல்லியை தீர்மானிக்க வேண்டும் என்று நானும் கருணாநிதியும் சொன்னோம். இன்று நாங்கள்தான் தீர்மானித்து இருக்கிறோம். அப்புறம் எதுக்கு நான் இருக்க வேண்டும்.. நான் கேட்டேனே உங்களிடம் என்று சொன்னார். இதுதான் வரலாறு. இது தெரியாமல் பேசுகிறார்கள். நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெளிவாக பட்டியல் போட்டார்..
2004-2013 வரை ஒன்றிய அரசில் கூட்டணியில் இருந்தோம். என்னென்ன செய்தோம் என்று தெளிவாக பட்டியல் போட்டார். மேலும் தமிழ்நாட்டிற்கு வரும் அமித்ஷா, தமிழகத்திற்கு என்ன செய்தார் என்று பட்டியல் போடவேண்டும் என்று கேட்டார். குறைந்தபட்சம் ஏதாவது ஒன்றை அமித்ஷா பேசியிருக்கிறாரா? கேள்வி கேட்பதற்கு பதில் சொல்லாமல் சாதனைகள் இல்லாத காரணத்தால் இதுபோன்று பேசுவது அவர்களுக்கு வழக்கம்.
எனவே அதைப்பற்றி நாம் கவலைப்படவேண்டியது இல்லை. தமிழரை பிரதமராக ஆக்க வேண்டும் என்று என்பது அவர்களது நோக்கம் இல்லை. ஒருவேளை பிரதமர் மோடி அவருக்கான செல்வாக்கை இழந்துவிட்டதால் தெற்கில் எதாவது ஒரு வாய்ப்பு இருக்கா என நினைக்கலாம். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் பாஜகவை சீண்ட மாட்டார்கள்.
பிரதமர் மோடி இங்கு போட்டியிட்டால் நாங்கள் கஷ்டப்பட வேண்டியது இல்லை. வடநாடே அவரை விரட்டுகிறது என்றால் தென்நாடு விரட்டியே ஆக வெண்டும் என்ற இடத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் வந்து விடுவார்கள். பிரதமர் மோடி இங்கு போட்டியிடுவாரேயேனால் எங்களுக்கு அது மிக எளிதாக வெற்றியை தீர்மானிக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications