ஐயா கப்பல்ல வேலைன்னு.. அந்த ’வளந்தவன்’ சொன்னதை நம்பி! வேலுமணி போனை எடுக்காத ’ஷா’.. அதிருப்தி அதிமுக!
சென்னை: தமிழக அரசியலில் தேர்தலுக்கு பிறகான பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில், அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி குழப்பம் அதிகரித்து வருகிறது. அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த எஸ்பி வேலுமணி- சிவி சண்முகம் தரப்பு நினைத்த நிலையில், அது நடக்கவில்லை. இதனால் அவர்கள் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவை தொடர்பு கொண்டு பேச வேலுமணி எவ்வளவோ முயன்ற நிலையில், கடைசி வரை 'ஷா' பேசவேயில்லையாம்..
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக எதிர்க் கட்சியாக இருந்த அதிமுக வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஒருகாலத்தில் தமிழக அரசியலில் மறுக்க முடியாத முக்கிய சக்தியாக இருந்த அதிமுக, இந்த முறை மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது, நிர்வாகிகள் அதிர வைத்தது.

மறுபுறம் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
ஆனால் தனிப்பெரும்பான்மை இல்லாததால், காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு தவெகவுக்கு அவசியமான சூழல் உருவானது.
அதிமுக
இந்த நேரத்தில்தான் அதிமுகவுக்குள் பெரிய அளவில் பிளவு வெளிப்படையாக தெரிந்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையுடன் கருத்து வேறுபாட்டில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள் ஒன்றிணைந்து, சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த சம்பவம் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்திருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
அதிமுக அதிருப்தி அணி
அப்போது அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்ட தகவல் என்னவென்றால், தவெக அரசை காப்பாற்றிய அதிமுக அதிருப்தி அணிக்கு அமைச்சரவையில் முக்கிய இடம் கிடைக்கும் என்பதுதான். குறிப்பாக 25 எம்.எல்.ஏக்களுக்கு குறைந்தபட்சம் நான்கு அல்லது ஐந்து அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என சி.வி. சண்முகம் மற்றும் வேலுமணி தரப்பினர் நம்பிக்கை வைத்திருந்ததாக கூறப்பட்டது. இதற்காக பல கட்ட பேச்சுவார்த்தைகளும் நடந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், இறுதியில் அமைச்சரவை விரிவாக்கத்தில் தவெக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மட்டுமே இடம் வழங்கப்பட்டது. '
பாஜக
அதிமுகவில் இருந்து ஆதரவு அளித்தவர்களில் ஒருவருக்குக் கூட அமைச்சர் பதவி கிடைக்காதது, அந்த அணியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இதற்கிடையில், தேர்தலில் பாஜகவும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தேர்தலுக்கு முன் மத்திய அமைச்சர்கள் முதல் பல மாநில முதல்வர்கள் வரை தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் முடிவுகள் வெளியாகி தவெக ஆட்சியை பிடித்த பிறகு, பாஜக தலைமை அமைதியாக உள்ளது.
எஸ்பி வேலுமணி
"திமுக ஆட்சி தோற்க வேண்டும் என்பதே முதன்மை நோக்கமாக இருந்தது. அது நடந்துவிட்டது. இனி விஜய் தலைமையிலான அரசு எப்படி செயல்படுகிறது என்பதை பொறுமையாக பார்க்க வேண்டும்" என்ற மனநிலையில்தான் பாஜக தலைமை இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், அதிமுகவுக்குள் நடக்கும் உள்கட்சி மோதல் குறித்தும் பாஜக எந்த கருத்தையும் சொல்லாமல் இருப்பதையும் கவனிக்க வேண்டும். குறிப்பாக டெல்லி பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக இருந்த எஸ்.பி. வேலுமணிக்கு கூட எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமித் ஷா
அமித் ஷாவை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேலுமணி முயன்றதாகவும், ஆனால் அவரது அழைப்புகள் ஏற்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. அதன்பிறகு டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டபோதும், "இன்னும் ஒரு மாதத்திற்கு தொந்தரவு செய்ய வேண்டாம்" என்ற தகவல் தெரிவிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
பாஜக தலைமை
அதோடு, "அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி சொல்வதை கேளுங்கள்" என்று பாஜக தலைமை நேரடியாகவே வேலுமணியிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுக அதிருப்தி அணியினர் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு பிறகு தங்களுக்கு அரசியல் முக்கியத்துவம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிமுக மற்றும் பாமக
மறுபுறம், தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் அதிமுக மற்றும் பாமக இன்னும் பாஜக அணியில் தொடர்வது, தேசிய அளவில் பாஜக தலைமையை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தற்போதைக்கு அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிடாமல் அமைதியாக இருக்கவே பாஜக விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் விரைவில் அமித் ஷா தமிழகம் வந்து இவ்விவகாரம் தொடர்பாக பேச்சு நடத்துவார் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications